இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்காளதேசத்தினர்; வேலை தேடியதும் அம்பலம்


இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்காளதேசத்தினர்; வேலை தேடியதும் அம்பலம்
x
தினத்தந்தி 23 Jun 2024 4:05 PM GMT (Updated: 24 Jun 2024 6:40 AM GMT)

வங்காளதேசத்தை சேர்ந்த 9 பேர் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து வேலை தேடியுள்ளனர்.

அகர்தலா,

வங்காளதேசம், மியான்மர் நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழையும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் குடும்பமாக நுழையும் நபர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாற்று பெயர், அடையாள அட்டையுமின்றி சட்டவிரோதமாக வசித்து வருகின்றனர். அந்த நபர்களை கைது செய்ய மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இந்நிலையில், வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வங்காளதேசத்தில் இருந்து திரிபுரா மாநிலத்திற்குள் நுழைந்த 6 பெண்கள் உள்பட 9 பேரும் ரெயில் மூலம் டெல்லி, பெங்களூரு உள்பட பல்வேறு நகரங்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் வேலை தேடி திரிபுராவுக்குள் நுழைந்துள்ளனர். பின்னர், நாட்டின் பிற பகுதிகளுக்கும் வேலை தேடி செல்ல திட்டமிட்டுள்ளனர்.

இதையடுத்து, அகர்தலா ரெயில் நிலையத்தில் கைது செய்யப்பட்ட 9 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் 20 முதல் 45 வயதிற்கு உள்பட்டவர்கள் ஆவர்.

கடந்த 2 மாதத்தில் மட்டும் வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக திரிபுராவுக்குள் 55 பேர் நுழைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story