கும்பமேளாவில் இருந்து திரும்பிய போது விபத்து: லாரி- மினி பஸ் மோதி 7 பேர் பலி

கும்பமேளாவில் இருந்து திரும்பிய போது ஏற்பட்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.
ஜபல்பூர்,
உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடந்து வருகிறது. கடந்த மாதம் 13-ந் தேதி தொடங்கிய இந்த மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வு நாடு முழுவதும் இந்துக்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.
அந்த வகையில், கும்பமேளாவில் புனித நீராடிவிட்டு ஆந்திராவை சேர்ந்தவர்கள் சிலர் மினி பஸ்சில் திரும்பிக் கொண்டிருந்தனர். அந்த மினி பஸ் இன்று காலை மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள சிஹோரா நகருக்கு அருகே சென்றபோது எதிரே வந்த லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் ஆந்திராவை சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் லாரி தவறான பக்கத்திலிருந்து நெடுஞ்சாலையில் சென்றதால் விபத்து ஏற்பட்டதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.