வனப்பகுதியில் 15 வயது சிறுமி, ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

வனப்பகுதியில் 15 வயது சிறுமி, ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
திருவனந்தபுரம்,
கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டம் பைவளிகே பகுதியை சேர்ந்தவர் பிரியேஷ். தொழிலாளி. இவரது மனைவி பிரபாவதி. இவர்களது மகள் ஸ்ரேயா (வயது 15), அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். மேலும் 8-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகள் உள்ளார். இதேபோல் சிறுமி ஸ்ரேயாவின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர் பிரதீப்(42). ஆட்டோ டிரைவர்.
பக்கத்து வீடு என்பதால் சிறுமி ஸ்ரேயாவும், பிரதீப்பும் நட்பாக இருந்து வந்தனர். மேலும் பிரதீப், சிறுமியின் குடும்பத்தினருக்கு பல்வேறு உதவிகள் செய்து வந்தார். இதற்கிடையே கடந்த மாதம் 11-ந்தேதி இரவு வீட்டில் இருந்த ஸ்ரேயா திடீரென காணாமல் போய்விட்டார். இதேபோல் பக்கத்து வீட்டை சேர்ந்த பிரதீப்பையும் காணவில்லை. இதனால் சிறுமியின் தந்தை அளித்த புகாரின்் பேரில் கும்பளா போலீசார் வழக்குப்பதிவு செய்துகொண்டனர்.
மேலும் சிறுமி ஸ்ரேயா, பிரதீப்பை பல்வேறு இடங்களில் தேடிபார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர்களது செல்போன் எண்ணுக்கு பலமுறை தொடர்பு கொண்டனர். ஆனால் அவர்களது செல்போன்கள் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது. இந்தநிலையில் சைபர் செல் உதவியுடன் அவர்கள் இருக்கும் இடத்தை கண்டறிந்தனர். அதில் அவர்கள் 2 பேரும் அப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் இருப்பதாக செல்போன் சிக்னல் காட்டியது.
அதன்படி போலீசார் வனப்பகுதிக்குள் சென்று பார்த்தனர். அப்போது வனப்பகுதியில் உள்ள ஒரு மரத்தில் சிறுமி ஸ்ரேயாவும், பிரதீப்பும் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து பிணமாக கிடந்தனர். இதையடுத்து அவர்களது உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுமியும், பிரதீப்பும் ஒன்றாக வெளியே சென்றது ஏன், எதற்காக வனப்பகுதிக்கு சென்று தற்கொலை செய்து கொண்டனர் என்பது தெரியாமல் மர்மமாகவே உள்ளது. இதுகுறித்து தற்கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.