தலித்துகளுக்கு எதிரான வன்முறை: கர்நாடகாவில் 101 பேருக்கு ஆயுள் தண்டனை


தலித்துகளுக்கு எதிரான வன்முறை:  கர்நாடகாவில்  101 பேருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 25 Oct 2024 2:16 PM IST (Updated: 25 Oct 2024 4:12 PM IST)
t-max-icont-min-icon

தலித் மக்களின் வீடுகளை தீ வைத்து எரித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 101 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து கர்நாடக கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடகாவின் கொப்பள் மாவட்டத்தில் உள்ள மரகும்பி கிராமத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலித் மக்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு பிரிவினருக்கும் இடையே மோதல் வெடித்தது. முடிவெட்டும் கடைகள், உணவகங்களுக்கு தலித் மக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால், இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் தலித் மக்களுக்கு சொந்தமான இடங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த வன்முறையை தொடர்ந்து கர்நாடகா முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் போராட்டம் வெடித்தது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், வன்முறையில் ஈடுபட்டதாக 117-பேரை கைது செய்தனர். இவர்களுக்கு எதிரான வழக்கு கொப்பல் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்தது. 10 ஆண்டுகளாக இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்ததையடுத்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில் வழக்கில் தொடர்புடைய 101 பேரையும் குற்றவாளிகள் என கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து, தண்டனை விவரங்களை நேற்று அறிவித்த கோர்ட்டு, குற்றவாளிகள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

கோர்ட்டு உத்தரவை கேட்டதும் குற்றவாளிகளின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அங்கேயே போராட்டத்தில் ஈடுபட்டதால் கோர்ட்டு வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது கங்காவதி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரே வழக்கில் 101 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுவது நாட்டிலேயே இதுதான் முதல் முறையாகும்.


Next Story