கோடை காலத்திற்கு ஏற்ற இயற்கை பானங்கள்: வீட்டிலேயே ஈசியா தயாரிக்கலாம்

கோடை காலத்தில் பானகம் அருந்தினால் உடலுக்கு குளிர்ச்சி தருவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்தும்.
கோடை காலம் என்றாலே வெயிலின் உக்கிரத்தால் வெளியே செல்வதற்கே யோசிக்கிறோம். வீட்டில் இருந்தால்கூட சூட்டை தணிப்பதற்காக பல்வேறு பானங்களை அருந்துகிறோம். இந்த பானங்கள் பாட்டில்களில் அடைக்கப்பட்ட பானங்களாக இல்லாமல், இயற்கையாக கிடைக்கும் பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் பானமாக இருந்தால் உடலையும் மனதையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும். இவ்வாறு கோடை காலத்தில் அருந்தவேண்டிய பானங்கள், அவற்றை தயாரிக்கும் முறைகள் மற்றும் அதன் பலன்களை பார்ப்போம்.
1.பானகம்
குளிர்ந்த தண்ணீர் -1 லிட்டர், வெல்லம்- ஒரு கப், எலுமிச்சம் பழம்- ஒன்று, புளி-ஒரு எலுமிச்சை அளவு, சுக்கு கால் தேக்கரண்டி, ஏலக்காய் 2, ஜாதிக்காய் பொடி ஒரு சிட்டிகை, மஞ்சள் -ஒரு சிட்டிகை, உப்பு தேவையான அளவு, துளசி இலை புதினா இலை வகைக்கு ஐந்து,
முதலில் புளியை தண்ணீரில் கரைத்து அதனுடன் வெல்லத்தையும் கரைக்கவும், பின்னர் எலுமிச்சம் பழச்சாறு , சுக்கு, ஏலக்காய் , மஞ்சள், மிளகு, ஜாதிக்காய் பொடி, உப்பு எல்லாவற்றையும் சேர்த்து கரைத்து வடிகட்டவும், அதனுடன் மணத்திற்காக புதினா இலை, துளசி இலையை போடவும், இப்போது சுவையான பானகம் தயார். இது உடலுக்கு குளிர்ச்சி தருவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்தும்.
2. நன்னாரி சர்பத்
நன்னாரி வேர் இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் நன்னாரி- 100 கிராம், சர்க்கரை- 500 கிராம், தண்ணீர் ஐந்து கப், ஒரு எலுமிச்சை பழத்தின் சாறு
நன்னாரி வேர்களை நன்கு சுத்தம் செய்து இயந்திரத்தில் கொடுத்து பொடித்து வர வேண்டும். பின்பு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து வடிகட்ட வேண்டும். வடிகட்டிய நன்னாரி தண்ணீரில் சர்க்கரை, எலுமிச்சை பழச்சாறு சேர்த்து நன்றாக காய்ச்சி எடுக்க வேண்டும். தேவையான வேளைகளில் இந்த நன்னாரி சர்பத்தில் தண்ணீர் கலந்து குடிக்க வேண்டும். இதை செய்வதற்கு கடினமாக இருந்தால் கடைகளில் கிடைக்கும் நன்னாரி சர்பத்தை வாங்கி பயன்படுத்தலாம். இது உடலுக்கு குளிர்ச்சியைத் தரும், சிறுநீர் நன்றாக பிரியும்.
3.வில்வப்பழ சர்பத்
வில்வ பழத்திலிருந்து சாறு எடுத்து அதனுடன் நாட்டு வெல்லம் சேர்த்து, நன்றாக கொதிக்க வைத்து மணப்பாகு பதத்தில் எடுத்து பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். இதில் தேவையானபோது ஐந்து முதல் பத்து மில்லி அளவு எடுத்து அதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர் கலந்து குடிக்க வேண்டும். இது வெயில் காலத்திற்கு மிகவும் ஏற்ற பானமாகும். உடலுக்கு குளிர்ச்சியை தரும். குடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரும். குடல் புண்களை குணப்படுத்தும்.
4.பதநீர்: ஆரோக்கியமான பானங்களில் பதநீர் இன்றியமையாத இயற்கை பானம். இதில் அதிக அளவு கால்சியம், இரும்பு சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ் உள்ளது. இது எலும்புக்கு நல்ல பலத்தை தரும், உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.
5.நீர்மோர்: தயிருடன் நீர் சேர்த்து நன்றாக ஆற்றி வெண்ணையை வடிகட்ட வேண்டும். இந்த நீர் மோரில் இஞ்சி, புதினா, மிளகாய்க்கு பதிலாக சிறிதளவு மிளகுத்தூள், வறுத்த பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து குடிக்க வேண்டும். இதனால் நல்ல செரிமானம் உண்டாகும், உடலுக்கு குளிர்ச்சியை தரும், சிறுநீர் நன்றாக பிரியும்.
6.இளநீர்: கோடை காலம் வந்து விட்டாலே இளநீருக்கு சற்று மவுசு அதிகம் தான். இளநீரில் பொட்டாசியம் சத்து இருப்பதால் கோடை காலத்தில் வியர்வை வெளியேறுவதால் ஏற்படும் சோர்வை நீக்கும், உடலுக்கு குளிர்ச்சியை தரும், சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கும்.
7. எலுமிச்சை பழ பானம்:
எலுமிச்சை பழச்சாற்றில் சர்க்கரை, சிறிதளவு உப்பு சேர்த்து தண்ணீரில் கலந்து, புதினா இலை இரண்டு சேர்த்து குடிக்க வேண்டும். எலுமிச்சையில் உள்ள சிட்ரேட் சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கிறது, உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தரும். இதில் உள்ள வைட்டமின் சி சத்து, சிறந்த நோய் எதிர்ப்புச் சக்தியை கொடுக்கும்.
8.செம்பருத்தி மணப்பாகு: இது கோடை பானத்திற்கு ஏற்ற சிறந்த பானம். இது உடலில் உள்ள கழிவுகளை நீக்கும், இதயத் தசைகளுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரும். உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும்.
செம்பருத்தி இதழ்களை அரைத்து அதனுடன் தண்ணீர் கலந்து தேவையான அளவு வெல்லம் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். மணப்பாகு பதம் வந்தவுடன் ஆற வைக்கவும். தேவையான போது சிறிதளவு எலுமிச்சை சாறு, இஞ்சிச்சாறு ஆகியவற்றை கலந்து குடித்தால், கோடை வெயிலின் தாக்கம் தெரியாமல் உற்சாகமாக வைத்திருக்கும்.
9.தர்பூசணி பழச்சாறு:-கோடை காலத்தின் வரப்பிரசாதமான தர்பூசணி பழத்தை அப்படியே சாப்பிடலாம். அல்லது தர்பூசணி பழத்தின் சாற்றை குடிக்கலாம். இது தாகத்தை தணிக்கும், உடலுக்கு குளிர்ச்சியை தரும், சிறுநீர் பெருக்கி செய்கையும் இதற்கு உண்டு.
10. லஸ்ஸி பானம்: தயிர், சர்க்கரை கொண்டு தயாரிக்கும் இந்த பானம் கோடை காலத்திற்கு மிகவும் ஏற்றது. இதனால் உடலுக்கு தேவையான ஆற்றல் மற்றும் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், போன்றவை கிடைக்கிறது.
11.கரும்புச்சாறு:
கரும்புச் சாறுடன், சிறிதளவு இஞ்சி, எலுமிச்சை சேர்த்து குடித்தால் உடலுக்கு குளிர்ச்சி, சீரணம் தரும். உடல் சூடு, பித்தத்தை தணிக்கும், காமாலை நோயாளிகளுக்கு நல்லது.
12.பார்லி தண்ணீர்:
பார்லியை தண்ணீரில் நன்றாக கொதிக்க விட்டு, ஆற வைத்து குடிக்க வேண்டும். இதனால் கோடை காலங்களில் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் நீங்கும், சிறுநீரக கற்களை வெளியேற்றும். சிறுநீர் பெருக்கி செய்கை இதற்கு உண்டு.
13.முலாம்பழச்சாறு:
கோடை காலத்திற்கேற்ற சிறந்த பானம் முலாம்பழச்சாறு. இப்பழத்தில் பீட்டா கரோட்டின் சத்து உள்ளது. இது உடலின் தேவையற்ற கழிவுகளை அகற்றும். ஆரோக்கியமான சருமத்தை உருவாக்கும். உடலுக்கு குளிர்ச்சி தரும், சிறுநீர் கடுப்பு நீங்கும்.
14. சீரக கொத்தமல்லி பானம்:
சிறிதளவு சீரகம், கொத்தமல்லி எடுத்து தண்ணீரில் நன்றாக கொதிக்க வைத்து, ஆற வைத்து குடிக்க வேண்டும், இது உடலுக்கு குளிர்ச்சியை தரும், பித்தத்தை அகற்றும், உடல் உள் உறுப்புகளில் உள்ள கழிவுகளை அகற்றும்.
கோடைகாலத்தில் தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் பெரியவர்கள் குடிக்க வேண்டும். இதனால் தோலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும், உடலுக்கு குளிர்ச்சி தரும். சிறுநீரகங்கள் சிறப்பாக வேலை செய்வதற்கு உதவி செய்யும்.
