வார விடுமுறை: திருச்செந்தூர் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
தூத்துக்குடி,
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். குறிப்பாக விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும்.
அந்த வகையில் இன்று ஞாயிறு விடுமுறை தினத்தையொட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் அதிகளவில் குவிந்தனர். இதனால், கடற்கரை, நாழிக்கிணறு, வள்ளி குகை போன்ற இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அதிகளவிலான பக்தர்களின் வருகையால், இலவச தரிசனம், 100 ரூபாய் கட்டண தரிசனம், முதியோருக்கு வழி என அனைத்திலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இதனால் பக்தர்கள் நீண்ட வரிசைகளில் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படும் நிலையில், கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.