தைப்பூச விழா.. வடலூர் சத்திய ஞான சபையில் நாளை ஜோதி தரிசனம்


தைப்பூச விழா.. வடலூர் சத்திய ஞான சபையில் நாளை ஜோதி தரிசனம்
x

சத்திய ஞான சபையில் 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது.

வடலூர்:

வடலூர் சத்திய ஞான சபையில் 154-வது ஆண்டு தைப்பூச விழா நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி, இன்று (திங்கட்கிழமை) கொடியேற்றம் நடைபெற்றது. காலை 7.30 மணியளவில் வள்ளலார் பிறந்த மருதூர், தண்ணீரால் விளக்கு எரித்த கருங்குழி இல்லத்திலும், வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பத்திலும், வடலூர் சத்திய தருமச்சாலையிலும் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது. இதை தொடர்ந்து காலை 10 மணியளவில் சத்திய ஞான சபையில் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து நாளை (செவ்வாய்க்கிழமை) ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. சத்திய ஞான சபையில் 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது. காலை 6 மணிக்கு முதல் கால ஜோதி தரிசனம் நடக்கிறது. பின்னர், காலை 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மணி மற்றும் 10 மணிக்கும், 12-ம்தேதி (புதன்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கும் ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது.

ஜோதி தரிசனத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால், அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதி, அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

தைப்பூச ஜோதி தரிசன விழா முடிந்த பின்னர், 13-ம் தேதி (வியாழக்கிழமை) மேட்டுக்குப்பத்தில் உள்ள சித்தி வளாக மாளிகையில் திரு அறை தரிசன பெருவிழா நடைபெற உள்ளது.


Next Story