கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் நற்கருணை பவனி


கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் நற்கருணை பவனி
x

வழிநெடுகிலும் நற்கருணை பவனிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரியில் தூய அலங்கார உபகார மாதா திருத்தலம் உள்ளது. இந்த திருத்தலம் தமிழகத்தில் உள்ள மிகவும் புகழ் பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ திருத்தலங்களில் ஒன்றாகும். ஆரம்பகாலத்தில் இந்தத் திருத்தலத்தில் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 10 நாட்கள் திருவிழா நடத்தப்பட்டது.

ஆனால், இந்த மாதத்தில் மீன் தொழில் அதிகமாக இருந்து வந்ததால் தேர்பவனி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவதில் சிரமம் இருந்து வந்தது. இதன் காரணமாக செப்டம்பர் மாதம் நடைபெற்றுவந்த திருவிழா பங்கு மக்களின் வசதிக்காக டிசம்பர் மாதம் மாற்றி வைக்கப்பட்டது.

இருப்பினும் பாரம்பரியமாக நடந்து வந்த செப்டம்பர் மாத திருவிழாவை நினைவுகூறும் வகையில் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 2 நாட்கள் மட்டும் தேதிப்படி திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று முன்தினம் மாலையில் ஜெபமாலையும் மாலை ஆராதனையும் நற்கருணை ஆசீரும் நடந்தது. 2-வது நாளான நேற்று காலையில் திருவிழா திருப்பலியும் முதல் திருவிருந்தும் நடந்தது. இதில் பல பங்குகளை சேர்ந்த பங்குத்தந்தையர்கள் பங்கேற்றனர்.

பின்னர் மாலையில் நற்கருணை பவனி நடந்தது. இதையொட்டி தூய அலங்கார உபகார மாதா திருத் தலபீடத்தில் இருந்து நற்கருணையை திருத்தல அதிபர் பங்குத்தந்தை உபால்டு மரியதாசன் தலைமையில் அருட்பணியாளர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் திருத்தலத்தின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரதத்தில் வைத்து வீதிகளில் பேண்ட் இசை முழங்க ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

திருத்தலத்தின் முன்பு இருந்து புறப்பட்ட இந்த நற்கருணை பவனி, ராஜசங்கீத தெரு, ஜோசப் தெரு, சன்னதி தெரு, ரட்சகர் தெரு, அலங்கார மாதா தெரு வழியாக மீண்டும் திருத்தல முற்றத்தை வந்தடைந்தது. வழிநெடுகிலும் பல வண்ணமலர்களால் கோலமிட்டு நற்கருணை பவனிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நற்கருணை பவனியில் அருட்பணியாளர்கள், பங்குமக்கள், அன்பியங்களைச் சேர்ந்தவர்கள், பக்த சபையினர், அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள் திரளாக கலந்து கொண்டனர். இறுதியாக மறையுரையும் நற்கருணை ஆசீரும் நடந்தது.

1 More update

Next Story