கசப்பான அனுபவங்களை சனி பகவானிடம் அர்ப்பணிக்கும் வினோத வழிபாடு

கட்டுமான பணி தடங்கலின்றி நடக்க, சனிக்கிழமைகளில் வன்னிவேடு கோவிலில் உள்ள சனீஸ்வரருக்கு பாகற்காய் மாலை அணிவித்து, எள் தீபமேற்றி வழிபடுகிறார்கள்.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டைக்கு அருகில் வன்னிவேடு என்ற கிராமம் உள்ளது. இங்கு வன்னி மரங்கள் அதிகம் உள்ளதால் இத்தலத்துக்கு வன்னிக்காடு என்ற பெயரும் உண்டு. இங்கு அகத்தியர் வழிபட்ட அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இறைவியின் திருநாமம் புவனேஸ்வரி. இக்கோவிலில், ஒரு வன்னி மரத்தின் கீழ் விநாயகர் மற்றும் சனீஸ்வரர் அடுத்தடுத்த சன்னிதிகளில் எழுந்தருளி உள்ளனர்.
இந்த சனீஸ்வரருக்கு பாகற்காய் மாலை அணிவித்து வழிபடும் முறை வழக்கத்தில் உள்ளது. வீடு மற்றும் கட்டடம் கட்டும் பணியைத் துவக்குவோர், அது தடங்கலின்றி நடக்க, சனிக்கிழமைகளில், சனீஸ்வரருக்கு, பாகற்காய்களை மாலையாகத் தொடுத்து அணிவித்து, எள் தீபமேற்றி வழிபடுகிறார்கள்.
தங்கள் வாழ்க்கையில் செய்த தவறுகளை மன்னிக்க வேண்டியும், கசப்பான அனுபவங்களை சனி பகவானிடமே அர்ப்பணித்து விடுவதாகவும், இனி, அவ்வாறு நடக்கக்கூடாது என்றும் இந்த வேண்டுதலைச் செய்கின்றனர்.






