அரச மரத்தை சுற்றி வந்து வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்


அரச மரத்தை சுற்றி வந்து வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
x

அரச மரத்தை வெள்ளிக்கிழமை வலம் வந்தால் சகல சவுபாக்கியங்களும் கிட்டும் என்பது நம்பிக்கை.

அரச மரத்தை அஸ்வத்தம் என்றும் கூறுவர். அஸ்வத்தா என்றால் வழிபடுவோரின் பாவத்தை அடுத்த நாளே போக்குவது என்று பொருள். கபம், பித்தம் போன்ற நோய்களையும் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் சரும நோய்களையும் போக்கக்கூடிய குளிர்ச்சி தரும் மரம் அரச மரமாகும். அரச மரத்தை நெருங்கிச் சுற்றக் கூடாது, தொடக்கூடாது. ஆனால், சனிக்கிழமை மட்டும் அரச மரத்தைத் தொட்டு வழிபடலாம்.

அரச மரத்தை அதிகாலை வேளையில் வலம் வரும்போது, அந்த மரத்திலிருந்து வெளியாகும் பிராண வாயுவில் சக்திவாய்ந்த ஓசோனின் தாக்கம் அதிகமிருக்கும். எனவே குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் காலை வேளையில் நீராடிவிட்டு ஈர ஆடையுடன் அரச மரத்தை வலம் வந்தால், கர்ப்பக் கோளாறுகள் நீங்கி குழந்தை பாக்கியம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதேபோல ஆண்களும் வலம் வந்தால், அவர்களுக்கு சுக்கில விருத்தி அதிகமாகி குழந்தைப் பேறுக்கு வழிவகுக்கும்.

அரச மரத்தை ஞாயிறன்று வலம் வந்தால் நோய் அகலும். திங்களன்று வலம் வந்தால் மங்களம் உண்டாகும், செவ்வாய்க்கிழமை வலம் வந்தால் தோஷங்கள் விலகும், புதன் கிழமை வலம் வந்தால் வியாபாரம் பெருகும். வியாழக்கிழமை வலம் வந்தால் கல்வி வளரும். வெள்ளிக்கிழமை வலம் வந்தால் சகல சவுபாக்கியங்களும் கிட்டும், சனிக்கிழமை வலம் வந்தால் சர்வ கஷ்டங்களும் விலகி லட்சுமியின் அருள் கிடைக்கும்.

மூன்று முறை வலம் வந்தால் இஷ்ட சித்திகளும், ஐந்து முறை வலம் வந்தால் வெற்றியும், ஒன்பது முறை வலம் வந்தால் புத்திர பாக்கியமும், பதினொரு முறை வலம் வந்தால் சகல பாக்கியங்களும், நூற்றியெட்டு முறை வலம் வந்தால் அஸ்வமேத யாகம் நடத்திய பலனும் கிடைக்குமென்று நூல்கள் சொல்கின்றன.

சந்திரனின் ஆதிக்கம் மிகுந்த அமாவாசையும், அவனுக்குரிய திங்கட்கிழமையும் சேர்ந்த நாளில் அதிகாலையில் அரச மரத்தை வழிபட்டு, அதை ஸ்ரீமன் நாராயணனாக பாவித்து 108 முறை வலம் வந்து வணங்க வேண்டும். அன்று ஏழைகளுக்கு அன்னதானம் செய்யலாம், ஆடைகள் வாங்கி வழங்கலாம், மூத்த சுமங்கலிகளின் கால்களில் விழுந்து வணங்கி ஆசீர்வாதம் பெறலாம்.

குழந்தை இல்லாத பெண்களுக்கு குழந்தை பாக்கியம், கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம், சுமங்கலிகளுக்கு கர்ப்பப்பைக் கோளாறு நீங்குதல், பித்ருசாப தோஷ நிவர்த்தி தருவது அரச மர வழிபாடு.


Next Story