20 வகை பிரதோஷங்களும்... வழிபாட்டு பலன்களும்


20 வகை பிரதோஷங்களும்... வழிபாட்டு பலன்களும்
x

மகா பிரதோஷம் தினத்தில் எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் செய்வது மிகவும் சிறப்புக்குரியது.

1. தினசரி பிரதோஷம்:

தினமும் பகலும் இரவும் சந்திக்கும் சந்தியா காலமான 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும். நித்திய பிரதோஷத்தை யார் ஒருவர், ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறாரோ அவருக்கு நிச்சயமாக முக்தி கிடைக்கும் என்பது ஐதிகம்.

2. பட்சப் பிரதோஷம்:

அளவாசைக்குப் பிறகான, சுக்ல பட்சம் என்ற வளர்பிறை காலத்தில் என்ற வளர்பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் திரயோதசி திதியை பட்சப் பிரதோஷம் என்கிறோம். இந்த பிரதோஷ கால வேளையில் பட்சி லிங்க வழிபாடு (மயில் வழிபட்ட மயிலாப்பூர், மயிண்டுதுறை போன்று) செய்வது உத்தமம்.

3. மாதப் பிரதோஷம்:

கிருஷ்ண பட்சம் என்ற தேய்பிறையில் பவுர்ணமிக்குப் பிறகு 13-வது திதியாக வரும் திரயோதசி திதியே மாதப் பிரதோஷம் ஆகும். இந்த பிரதோஷ நாளில் மாலை நேரத்தில் பாணலிங்க வழிபாடு (பாணம் என்பது ஒரு வகை லிங்கம்) செய்வது நன்மையான பலன்களைத் தரும்.

4. நட்சத்திரப் பிரதோஷம்:

பிரதோஷ திதியாகிய திரயோதசி திதியில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை, பிரதோஷ நேரத்தில் வழிபடுவது நட்சத்திர பிரதோஷம் ஆகும்.

5. பூரண பிரதோஷம்:

திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராமல், திரயோதசி திதி மட்டும் உள்ள பிரதோஷ நாளை, பூரண பிரதோஷம் என்பார்கள், இந்தப் பிரதோஷத்தின்போது சுயம்புவாக தோன்றிய லிங்கத்தை தரிசனம் செய்வது சிறப்பான பலனைத் தரும். பூரண பிரதோஷ வழிபாடு செய்பவர்கள் இரட்டைப் பலனை அடைவார்கள்.

6. திவ்யப் பிரதோஷம்:

பிரதோஷ தினத்தன்று நுவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது 'திவ்யப் பிரதோஷம்' ஆகும். இந்த நாளன்று மரகத லிங்கத்திற்கு அபிஷேக ஆராதணை செய்தால் பூர்வஜென்ம வினை முழுவதும் நீங்கும்.

7. தீபப் பிரதோஷம்:

பிரதோஷ தினமான திரயோதசி அன்று தீப தானங்கள் செய்வது, ஈசனுடைய ஆலயங்களை தீபங்களால் அலங்கரித்து ஈசனை வழிபாடு செய்வதை தீபப் பிரதோஷம் என்கிறோம். இவ்வாறு செய்வதால் சொந்த வீடு அமையும் வாய்ப்பு உருவாகும்.

8. சப்தரிஷி பிரதோஷம்:

வானத்தில் 'வ' வடிவில் தெரியும் நட்சத்திர கூட்டங்களை, சப்தரிஷி மண்டலம்' என்பார்கள். இது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வானில் தெளிவாகத் தெரியும். இந்த மாதங்களில் திரயோதசி திதியில் முறையாக பிரதோஷ வழிபாடு செய்து, சப்தரிஷி மண்டலத்தைத் தரிசித்து வழிபடுவதே சப்தரிஷி பிரதோஷம் ஆகும். இதனை அபயப் பிரதோஷம் என்றும் அழைப்பார்கள். இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கு பாவ புண்ணியம் பார்க்காது ஈசன் அருள்புரிவார்.

9. மகா பிரதோஷம்:

ஈசன் விஷம் உண்ட நாள் சனிக்கிழமை, திரயோதசி திதி ஆகும். எனவே சனிக்கிழமையும் திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் மகா பிர தோஷம் ஆகும். இந்த மகா பிரதோஷம் தினத்தில் எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் செய்வது மிகவும் சிறப்புக்குரியது. திருக்கடையூர், சென்னை வேளச்சேரியில் உள்ள தண்டீஸ்வரர் ஆலயம், திருச்சி, மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்ஜீலி சிவ ஆலயம், குடவாசலில் இருந்து நன்னிலம் செல்லும் பாதையில் உள்ள ஸ்ரீவாஞ்சியம் சிவ ஆலயம், கும்பகோணம் அருகே உள்ள திருக்கோடி காவல் சிவ ஆலயம் ஆகியவை, எமன் வழிபட்ட சுயம்பு லிங்கங்களில் குறிப்பிடத்தக்கவை. மாசி மாதம் வரும் மகா சிவராத்திரிக்கு முன்னால் வரும் பிரதோஷமும் மகா பிரதோஷம் எனப்படும்.

10. உத்தம மகா பிரதோஷம்:

சிவபெருமான் விஷம் அருந்திய தினம் சனிக்கிழமையாகும். அந்தக் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானது. அதிலும் சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறை சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகா பிரதோஷம் ஆகும். இது மிகவும் சிறப்பும் கீர்த்தியும் பெற்ற தினமாகும்.

11. ஏகாட்சர பிரதோஷம்:

வருடத்தில் முறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை எகாட்சர பிரதோஷம் என்பர். அன்றைக்கு சிவாலயம் சென்று, ஓம் என்ற பிரணவ மந்திரத்தை எத்தனை முறை உச்சரிக்க முடியுமோ, அத்தனை முறை உச்சரித்து, பின்னர் விநாயகரை வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினால் பலவிதமான நன்மைகள் ஏற்படும்.

12. அர்த்தநாரி பிரதோஷம்:

வருடத்தில் இரண்டு முறை மகா பிரதோளும் வந்தால் அதற்கு 'அர்த்தநாரி பிரதோஷம்' என்று பெயர். அந்த நாளில் சிவாலயம் சென்று வழிபட்டால், தடைப்பட்ட திருமணம் நடைபெறும். பிரிந்து வாழும் தம்பதி ஒன்றுசேர்வார்கள்.

13. திரிகரண பிரதோஷம்:

வருடத்துக்கு மூன்று முறை பிரதோஷம் வந்தால் அது திரிகரண பிரதோவும். இதை முறையாகக் கடைப்பிடித்தால் அஷ்ட லட்சுமிகளின் ஆசியும் அருளும் கிடைக்கும். பிரதோஷ வழிபாடு முடிந்ததும் அஷ்ட லட்சுமிகளுக்கும் பூஜை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

14.பிரம்மப் பிரதோஷம்:

ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால், அது பிரம்மப் பிரதோஷம். இந்தப் பிரதோஷ வழிபாட்டை முறையாக செய்தால் முன்ஜென்ம பாவம், தோஷம் நீங்கி நன்மைகளை அடையலாம்.

15. அட்சரப் பிரதோஷம்:

வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம். தாருகா வனத்து திஷிகள், நான் என்ற அகந்தையில் ஈசனை எதிர்த்தனர். ஈசன், பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார். தவறை உணர்ந்த ரிஷிகள், இந்தப் பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்து பாவ விமோசனம் பெற்றனர்.

16. கந்தப் பிரதோஷம்:

சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்தப் பிரதோஷம் எனப்படும். இது முருகப்பெருமான் சூரசம்ஹாரத்துக்கு முன் வழிபட்ட பிரதோஷ வழிபாடு. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் முருகன் அருள் கிட்டும்.

17. சட்ஜபிரபா பிரதோஷம்:

ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோவும் வந்தால் அது, சட்ஜபிரபா பிரதோஷம். தேவகியும் வசுதேவரும் கம்சனால் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களின் ஏழு குழந்தைகளை கம்சன் கொன்றான். எனவே, எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை முறையாக அவர்கள் அனுஷ்டித்ததால், கிருஷ்ணர் பிறந்தார். பக்தர்கள் இந்த விரதத்தை கடைப்பிடித்தால் முற்பிறவி வினை நீங்கி பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கலாம்.

18.அஷ்டதிக் பிரதோஷம்:

ஒரு வருடத்தில் வரும் எட்டு பிரதோஷ வழிபாட்டை முறையாகக் கடைப்பிடித்தால் அஷ்டதிக்குப் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்.

19. நவக்கிரகப் பிரதோஷம்:

ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது நவக்கிரகப் பிரதோஷம். இது மிகவும் அரிது. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவக்கிரகங்களின் அருளும் கிடைக்கும்.

20. துத்தப் பிரதோஷம்: இந்த பிரதோஷம் அரிதிலும் அரிது. ஒரு வருடத்தில் பத்து மகா பிரதோஷம் வருவது துத்த பிரதோஷம். அந்தப் பிரதோஷ வழிபாட்டை செய்தால் பிறவி குறைபாடுகள்கூட சரியாகும் என்பது ஐதீகம்.


Next Story