'தி கோட்' படத்தின் தலைப்பில் 'சனாதனம்'? - எம்.பி ரவிகுமார் கேள்விக்கு புஸ்ஸி ஆனந்த் பதில்


தி கோட் படத்தின் தலைப்பில் சனாதனம்? -  எம்.பி ரவிகுமார் கேள்விக்கு புஸ்ஸி ஆனந்த் பதில்
x
தினத்தந்தி 5 Sep 2024 11:14 AM GMT (Updated: 5 Sep 2024 12:04 PM GMT)

வி.சி.க எம்.பி.யான ரவிக்குமார், விஜய் படத்தின் தலைப்பில் சனாதனம் என்ற சொல்லின் பொருள் உள்ளதாக கூறினார். இந்த விமர்சனத்திற்கு புஸ்ஸி ஆனந்த் பதில் அளித்துள்ளார்.

சென்னை,

நடிகர் விஜய் நடித்துள்ள 'தி கோட்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. விஜய், தனது அரசியல் அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிறகு வெளிவந்திருக்கும் முதல் படம் இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை இந்த படம் கொடுத்துள்ளது. படம் சிறப்பாக உள்ளதாக விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். தி கோட் படம் குறித்த சில விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி.யான ரவிக்குமார், விஜய் படத்தின் தலைப்பில் சனாதனம் கருத்து உள்ளதாக கூறியுள்ளார். இது தொடர்பாக ரவிக்குமார் எம்.பி கூறியிருப்பதாவது:- விஜய் படத்தின் தலைப்பில் 'சனாதனம்'? The Greatest of all time என்பது ஒரு சனாதனக் கருத்தில்லையா? 'காலமெல்லாம் பெரியது இதுதான்' என்றால் காலம் மாறினாலும் இது மாறாது என்றுதானே அர்த்தம்! 'என்றும் மாறாதது' என்பதுதானே 'சனாதனம்' என்ற சொல்லின் பொருள்! இதைத் தெரிந்துதான் விஜய் படத்துக்குத் தலைப்பு வைத்தார்களா?எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே (தொல்.சொல். 157)" என்று பதிவிட்டார்.

இந்நிலையில், "படத்தை பொழுதுபோக்காக மட்டுமே பார்க்க வேண்டும்" என்று ரவிக்குமார் எம்.பி. விமர்சனத்திற்கு த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பதில் அளித்துள்ளார்.


Next Story