சர்ச்சைகளுக்கு மத்தியில் திருமணம்: நடிகர் பாலா


சர்ச்சைகளுக்கு மத்தியில்  திருமணம்: நடிகர் பாலா
x

ரூ.250 கோடி மதிப்புள்ள தனது சொத்துக்களை பாதுகாக்கவும், தன்னுடைய உடல்நலத்தை கவனித்துக் கொள்ளவும் துணை தேவைப்படுவதால் இந்த திருமணம் செய்துகொள்வதாக பாலா தெரிவித்திருந்தார்.

எர்ணாகுளம்,

தமிழில் 'அன்பு' என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி, 'காதல் கிசு கிசு', 'கலிங்கா', 'வீரம்', 'அண்ணாத்த' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பாலா. இயக்குநர் 'சிறுத்தை' சிவாவின் இளைய சகோதரர் ஆவார். மலையாளத்திலும் பல படங்களில் நடித்திருக்கிறார். 2019-ம் ஆண்டு அம்ருதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட பாலா, கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார்.

இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இதனிடையே 2021-ம் ஆண்டு எலிசபெத் என்ற மருத்துவரை பாலா திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் முதல் மனைவி அம்ருதாவிற்கும், அவருக்கும் இடையே பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

முன்னாள் மனைவி அம்ருதாவையும் அவரது மகளையும் பின்தொடர்ந்து பாலா துன்புறுத்தியதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், எர்ணாகுளத்திலுள்ள எடப்பள்ளி பகுதியிலுள்ள அவரது வீட்டில் வைத்து கேரள போலீசார் அவரை கைது செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பாலா பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் தனது தாய் மாமன் மகளான கோகிலா என்பவரை நடிகர் பாலா இன்று திருமணம் செய்துகொண்டார். எர்ணாகுளத்தில் உள்ள பாவகுளம் கோயிலில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் இவர்கள் திருமணம் நடைபெற்றது. ரூ.250 கோடி மதிப்புள்ள தனது சொத்துக்களை பாதுகாக்கவும், தன்னுடைய உடல்நலத்தை கவனித்துக் கொள்ளவும் துணை தேவைப்படுவதால் இந்த திருமணம் செய்துகொள்வதாக பாலா தெரிவித்தார்.

மேலும் தனது திருமணம் குறித்து சமூக வலைதள பக்கத்தில் அவர் குறிப்பிடும்போது, "கோகிலா என்னுடைய உறவினர். 74 வயதான என்னடைய தாயார் திருமணத்தில் கலந்துகொண்டு எங்களை வாழ்த்த ஆசைப்பட்டார். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரால் திருமணத்தில் கலந்துகொள்ள முடியவில்லை. கோகிலாவுக்கு மலையாளம் தெரியாது. கடந்த காலங்களில் என் மீதும், என் உடல் நலன் மீதும் அக்கறை கொண்டு உறுதுணையாக இருந்தார். அவரால் தான் என்னுடைய உடல்நலன் மேம்பட்டது" என தெரிவித்துள்ளார்.


Next Story