வேறு வழியின்றி விஜய்யின் படத்தை இயக்கினேன் - எஸ்.ஏ. சந்திரசேகர்

எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'ஜன நாயகன்' படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் வெளியாக உள்ளது.
சென்னை,
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். இவர் தற்போது எச். வினோத் இயக்கத்தில் 'ஜன நாயகன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, நரேன் ஆகியோர் நடிக்கின்றனர். கே.வி.என் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
அரசியல் தொடர்பான கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படம் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். இது விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் வெளியீடாக 2026 ஜனவரி 9ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.
இதற்கிடையில், விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், "எனது மகனை நானே சினிமாவில் அறிமுகப்படுத்தாமல் இன்னொரு இயக்குனரிடம் ஒப்படைப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. ஆனால் நான் எனது மகனை அப்படி தான் அறிமுகப்படுத்த விரும்பினேன். விஜய்யின் போட்டோ ஆல்பத்தை வைத்துக்கொண்டு எத்தனையோ இயக்குனர்களிடம் போய் நின்றேன். ஆனால் ஒருவரும் விஜய்யை இயக்க முன்வரவில்லை. அதனால் தான் வேறு வழியின்றி நானே விஜய்யின் (நாளைய தீர்ப்பு) படத்தை இயக்கினேன்" என்று தெரிவித்துள்ளார்.






