10 நாட்கள் உற்சாக கொண்டாட்டம்.. கேரளாவின் பாரம்பரிய பண்டிகை 'ஓணம்'

மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் ஹஸ்தம் நட்சத்திரத்தில் துவங்கி, திருவோணம் நட்சத்திரம் வரை இருக்கும் 10 நாட்கள் ஓணமாகக் கொண்டாடப்படுகிறது.

Update: 2024-09-06 07:33 GMT

ஓணம் அல்லது ஆவணி திருவோணம் என்பது இந்தியாவின், தென்தமிழகத்திலும் மற்றும் கேரள மாநிலத்திலும் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா ஆகும். ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம், திருவோண நட்சத்திரத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

ஓணம் வரலாறு

மகாபலி என்ற மன்னர் கேரளத்தை சிறப்போடு ஆண்டு வந்தார். கொடை செய்வதில் சிறந்து விளங்கிய மகாபலிக்கு, யாகம் மற்றும் தானம் செய்வதில் தனக்கு மிஞ்சியவர் எவரும் இல்லை என்ற செருக்கு ஏற்பட்டது. அவரது செருக்கை அடக்க, திருமால் குள்ளமான வாமன அவதாரம் எடுத்தார்.

மகாபலி வேள்வி செய்யும்போது வாமன அவதாரத்தில் வந்த திருமால், மூன்றடி மண் (நிலம்) கேட்க, மகாபலியும் தந்தார். அதன்படி ஒரு அடியால் இந்தப் பூமியையும் மறு அடியால் விண்ணையும் அளந்த திருமாலுக்கு, மூன்றாவது அடிக்காகத் தனது தலையையே கொடுத்தார் மகாபலி சக்கரவர்த்தி.

அவருக்கு முக்தி அளிக்க வேண்டி அவர் தலையில் கால் வைத்து அவரைப் பாதாள உலகிற்கு தள்ளினார் திருமால். தான் நாட்டுமக்கள் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பதால் ஆண்டுக்கு ஒருமுறை பாதாளத்திலிருந்து தனது நாட்டுக்கு வந்து மக்களைக் கண்டு மகிழும் வரம் வேண்டினார் மன்னர். அவ்வாறே வாமனரும் அருள்புரிந்தார். அதன்படி, ஒவ்வொரு திருவோணத் திருநாள் அன்றும் மகாபலி பாதாள உலகிலிருந்து பூலோகத்திற்கு வருவதோடு, தங்களது வீடுகளுக்கும் வந்து செல்வதாக கேரள மக்கள் நம்புகிறார்கள். இதனை நினைவு கூர்ந்து, மகாபலியை மீண்டும் வரவேற்கும் வகையில் ஓணத் திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

சங்ககால ஏடுகளில் விஷ்ணுவின் பிறந்தநாளாகவும், வாமனர் அவதரித்ததும் அன்றுதான் எனவும் குறிப்புகள் உள்ளன. இப்பண்டிகை பற்றி சங்ககால இலக்கியங்களான பத்துப்பாட்டு, நாலாயிர திவ்யபிரபந்தம், தேவாரம் ஆகிய நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன.

கேரளாவின் அறுவடைத் திருநாள்

கேரளாவின் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்றாக ஓணம் பண்டிகை முதன்மையானது. கொல்லவர்ஷம் என்ற மலையாள ஆண்டின் முதல் மாதமான சிங்கம் மாதத்தில் ஓண விழா கொண்டாடப்படுகிறது. பருவ மழைக் காலம் முடிந்ததும் எங்கும் பசுமையும் ஈரமும் நிறைந்திருக்கும் கேரளத்தின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் கேரள மக்களால் சாதி, மத வேறுபாடின்றி கொண்டாடப்படுகிறது. இதைக் கேரளத்தின் "அறுவடைத் திருநாள்" என்றும் அழைப்பர்.

மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் ஹஸ்தம் நட்சத்திரத்தில் துவங்கி, திருவோணம் நட்சத்திரம் வரை இருக்கும் 10 நாட்கள் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஓணம் பண்டிகை ஆயிரம் ஆண்டிற்கும் மேலாக கேரளத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஓணத் திருநாள் கொண்டாடப்படும் 10 நாட்களும் மக்கள் அதிகாலையிலே எழுந்து குளித்து வழிபாட்டில் ஈடுபடுவர். கசவு என்று சொல்லக்கூடிய சுத்தமான வெண்ணிற ஆடையை உடுத்தி "கைகொட்டுக்களி"எனும் நடனம் ஆடி மகிழ்வர். வீட்டுப் பெண்கள் வீட்டின் முன்பு 10 நாட்களும் தொடர்ந்து பூக்களினாலான கோலங்கள் இட்டு ஆடிப்பாடி மகிழ்வர்.

அத்தப்பூ கோலம்

ஓணம் பண்டிகையின் சிறப்பம்சம், மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாகக் கேரளாவின் ஒவ்வொரு வீட்டு வாசலில் போடப்படும் "அத்தப்பூ" என்ற பூக்கோலம் ஆகும். தினமும் வெவ்வேறு பூக்களுடன் கோலத்தை அழகுபடுத்துவர்.

"புலிக்களி" அல்லது "கடுவக்களி" என்று அழைக்கப்படும் நடனம் ஓணத்திருவிழாவின் நாலாம் ஓணம் எனப்படும் நான்காம் நாளில் கொண்டாடப்படுகிறது. களி என்பது மலையாள மொழியில் நடனத்தைக் குறிக்கும். இந்நாளில் சிவப்பு, கருப்பு மற்றும் மஞ்சள் வண்ணத்தினால் இசை ஒலிக்கேற்ப ஒரு வித தாளத்துடன் புலி வேடமிட்டு ஆடுவர்.

முதல் நாள் ஒரே வகையான பூக்கள் இரண்டாம் நாள் இரண்டு, மூன்றாம் நாள் மூன்றெனத் தொடர்ந்து பத்தாம் நாள் பத்து வகையான பூக்களால் அழகு செய்வர். பத்தாம் நாள், பூக்கோலத்தின் அளவு பெரிதாக இருக்கும். தும்பை, காசி, அரிப்பூ, சங்குப்பூ போன்ற பூக்களுக்கு முதலிடம் தருவர்.

நடைபெறும் திருவிழாவில், ஒவ்வொரு நாளுக்கும் தனித்தனி பெயர் கொடுத்துக் கொண்டாடுகிறார்கள். ஓணம் பண்டிகையின் முதல் நாள் அத்தம் , இரண்டாம் நாள் சித்திரா, மூன்றாம் நாள் சுவாதி என்றும் அழைக்கப்படும். அன்று மக்கள் ஒருவருக்கொருவர் பரிசுகள் அளித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வர்.

ஓண சத்யா

ஓணம் பண்டிகையின் நான்காம் நாளான விசாகத்தை முன்னிட்டு சிறப்பு உணவுகள் தயார் செய்யப்படும். "கானம் விற்றாவது ஓணம் உண்" என்ற பழமொழி ஓண சத்யா என்ற உணவின் சிறப்பைக் கூறுகிறது. ஆறு சுவைகளில் கசப்பு தவிர மற்ற சுவைகளில் 64 வகையான "ஓண சத்யா" என்ற உணவு தயாரிக்கப்படுகிறது.

புது அரிசி மாவில் தயார் செய்யப்பட்ட அடை, அவியல், அடை பிரதமன், பால் பாயாசம், அரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், காலன், ஓலன், ரசம், மோர், தோரன், சர்க்கரப் புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சிப்புளி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு பப்படம், காய வறுத்தது, சீடை, ஊறுகாய்கள் என உணவுகள் தயார் செய்யப்பட்டு கடவுளுக்குப் படைக்கப்படும்.

பெரும்பாலான உணவு வகைகளில் தேங்காய் மற்றும் தயிர் பெரும் பங்கு பெறுகிறது. இவ்வுணவு எளிதில் செரிமானம் ஆவதற்காக " இஞ்சிக்கறி", "இஞ்சிப்புளி" ஆகியவற்றை உணவுடன் எடுத்துக் கொள்வர்.

படகுப் போட்டி

ஐந்தாம் நாள் அனுஷம் (அனிளம்) எனப்படும். அன்று, கேரளத்தின் பாரம்பரியமான படகுப்போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியில் பங்கு பெறுவோர் வஞ்சிப்பாட்டு என்ற பாடலைப் பாடிக்கொண்டு படகைச் செலுத்துவது இதன் சிறப்பம்சம். ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கேரளத்தின் பாரம்பரிய விளையாட்டுகளான கயிறு இழுத்தல், களறி, படகுப்போட்டிகள், பாரம்பரிய நடனப் போட்டிகள் என 10 நாட்களும் பல விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்.

ஆறாம் நாள் திருக்கேட்டை(திரிக்கேட்டா), ஏழாம் நாள் மூலம். எட்டாம் நாள் பூராடம், ஒன்பதாம் நாள் உத்திராடம் என்று அழைக்கப்படும். பத்தாம் நாள் திருவோணம் என்ற கொண்டாட்டத்துடன் ஓணத் திருவிழா முடிவடைகிறது.

இந்த ஆண்டுக்கான ஓணம் கொண்டாட்டம் இன்று (6.9.2024) தொடங்கி 15-ம் தேதி முடிவடைகிறது.

Tags:    

மேலும் செய்திகள்