மனைவி அடிக்கடி தகராறு... திருமணம் செய்து வைத்த புரோக்கரை தாக்கிய தொழிலாளி கைது

மனைவி அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வருவதால் திருமணம் செய்து வைத்த புரோக்கரை தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-07-16 20:27 GMT

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே வடவாம்பழத்தை சேர்ந்தவர் ஜானகிராமன் மகன் சக்திவேல் (வயது 42). தொழிலாளி. இவருக்கு கடந்த 12 வருடத்திற்கு முன்பு திருமண புரோக்கரான அரசமங்கலத்தை சேர்ந்த பெருமாள் (69) என்பவர் தனது ஊரை சேர்ந்த ஜெகதீஸ்வரி என்பவரை திருமணம் செய்து வைத்துள்ளார்.

இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக சக்திவேலுக்கும், ஜெகதீஸ்வரிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த ஜெகதீஸ்வரி கணவரிடம் கோபித்து கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றதாக தெரிகிறது.

இந்த நிலையில் அரசமங்கலம் ரேஷன் கடை அருகில் பெருமாள் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற சக்திவேல், நீ தானே எனக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தாய். தற்போது என் மனைவி என்னிடம் அடிக்கடி தகராறு செய்து வருகிறாள். என்று கூறி பெருமாளை திட்டி தாக்கியதாக தெரிகிறது. இது குறித்த புகாரின் பேரில் வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்