பாலியல் புகார் எதிரொலி: ஜனசேனா கட்சியில் இருந்து ஜானி மாஸ்டர் நீக்கம்

பாலியல் புகார் எதிரொலியாக ஜனசேனா கட்சியில் இருந்து ஜானி மாஸ்டர் நீக்கப்பட்டார்.

Update: 2024-09-16 13:09 GMT

ஆனந்த்பூர்,

தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்ற 'மேகம் கருக்காதா பெண்ணே' பாடலுக்கு தேசிய விருது பெற்றவர் நடன இயக்குநர் ஜானி. விஜயின் வாரிசு படத்தில் இடம்பெற்ற 'ரஞ்சிதமே', ரஜினியின் காவாலா போன்ற ஹிட் பாடல்களுக்கு நடனம் அமைத்து கொடுத்தவர். இந்நிலையில் பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் கொடுத்த புகாரின்பேரில் நடன இயக்குநர் ஜானி மீது ஆந்திர மாநிலத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஐதராபாத், சென்னை, மும்பை என ஷூட்டிங் சென்ற இடங்களில் ஜானி மாஸ்டர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக, ஆந்திர மாநிலத்தில் பெண் திரைப்பட கலைஞர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இளம்பெண் அளித்த பாலியல் புகார் எதிரொலியாக ஜனசேனா கட்சியில் இருந்து ஜானி மாஸ்டர் நீக்கப்பட்டுள்ளார். ஜானி மீது ராயதுர்கம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அடுத்து ஜனசேனா தலைமை இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுதொடர்பாக ஜனசேனா கட்சி தனது எக்ஸ் வலைதளத்தில், "ஜனசேனா கட்சி நடவடிக்கைகளில் இருந்து விலகி இருக்க ஜானிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவர் மீது ராயதுர்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதை அடுத்து, கட்சித் தலைமை இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த முடிவு உடனடியாக அமலுக்கு வருகிறது" என்று அதில் பதிவிடப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்