கள்ளக்காதலுக்கு இடையூறு... முன்னாள் காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய மனைவி

தூங்கி கொண்டிருந்த ராம்குமாரின் கழுத்தை ஒயரால் இறுக்கி கொன்றோம் என்று மனைவி போலீசில் வாக்குமூலம் அளித்தார்.

Update: 2024-06-30 08:08 GMT

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் பாளேகுளி அருகே உள்ள சீத்தாகுட்டை கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகன் ராம்குமார் (வயது 26). ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார்.

இவருக்கும், சூளகிரி பகுதியை சேர்ந்த சுஜாதா (19) என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதற்கிடையே திருமணத்துக்கு முன்பே சுஜாதாவும், சூளகிரி பகுதியை சேர்ந்த சின்ன எலசப்பா மகன் கணேசன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த ராம்குமார் மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.

இந்த தகராறு குறித்து நாகரசம்பட்டி போலீ்ஸ் நிலையத்துக்கு புகார் சென்று போலீசார் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதற்கிடையே நேற்று முன்தினம் காலை ராம்குமார் தலையில் ரத்தக்காயங்களுடனும், ஒயரால் கழுத்து இறுக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் ராம்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதனை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் சுஜாதா தனது கள்ளக்காதலன் கணேசன் மற்றும் அவருடைய நண்பனான 17 வயது சிறுவனுடன் சேர்ந்து ராம்குமாரை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சுஜாதா, கணேசன், 17 வயது சிறுவனை கைது செய்தனர். இதனை தொடர்ந்து கைதான சுஜாதா போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதில் திருமணத்துக்கு முன்பே நானும், சூளகிரி பகுதியை சேர்ந்த கல்லூரியில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படிக்கும் கணேசனும் காதலித்து வந்தோம். ஆனால் எனது பெற்றோர் காதலை பிரித்து தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றிய ராம்குமாருடன் திருமணம் செய்து வைத்தனர். எனினும் கணேசனை மறக்க முடியாமல் இருந்து வந்தேன்.

இந்த நிலையில் தான் கள்ளக்காதல் விவகாரம் எனது கணவருக்கு தெரிந்து நாகரசம்பட்டி போலீஸ் வரை சென்றது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து என்னை கணவருடன் சேர்ந்து வாழுமாறு கூறி அனுப்பி வைத்தனர். என்னால் பழைய காதலை மறக்க முடியாமல் அவதிப்பட்டதை கணேசனிடம் கூறினேன். மேலும் தங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவன் ராம்குமாரை தீர்த்துகட்டலாம் என கூறினேன். அவரும் சம்மதம் தெரிவித்து உதவிக்கு அவருடைய நண்பரான 17 வயது சிறுவனை அழைத்தார்.

இதனை தொடர்ந்து சம்பவத்தன்று இரவு ராம்குமார் தூங்கியதும் கணேசனுக்கு போன் செய்து வீட்டுக்கு வருமாறு அழைத்தேன். அதன்படி கணேசன், 17 வயது சிறுவன் மொபட்டில் வீட்டுக்கு வந்தனர். இதையடுத்து நான் கதவை திறந்ததும் அவர்கள் உள்ளே வந்தனர். பின்னர் 3 பேரும் சேர்ந்து தூங்கி கொண்டிருந்த ராம்குமாரின் கழுத்தை ஒயரால் இறுக்கினோம். மேலும் தலையில் பயங்கரமாக தாக்கினோம். இதில் அவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதையடுத்து கணேசன், 17 வயது சிறுவன் வீட்டில் இருந்து சென்றுவிட்டனர்.

பின்னர் இந்த கொலையை மறைப்பதற்காக தனது கணவன் வாயில் ரத்தக்காயத்துடன் இறந்து கிடப்பதாக அழுது நாடகமாடினேன். எனினும் கழுத்து மற்றும் உடலில் காயங்கள் இருந்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி கைது செய்துவிட்டனர். இவ்வாறு அவர் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்