சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு தமிழக அரசு தயங்கக்கூடாது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2024-07-02 05:57 GMT

சென்னை,

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கோடை விடுமுறைக்குப் பிறகு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணைகள் வரும் 8-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு எந்த நேரமும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 69% இட ஒதுக்கீட்டின் தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அதன் ஆபத்தை உணராமல் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த தமிழக அரசு மறுத்து வருவது கண்டிக்கத்தக்கது.

69% இட ஒதுக்கீட்டை எதிர்த்து தினேஷ் என்பவர் புதிய வழக்கை தொடர்ந்திருப்பதால் இந்த விவகாரத்தை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. மாராத்தா இட ஒதுக்கீடு செல்லாது என்று 2021-ம் ஆண்டு மே மாதம் தீர்ப்பளிக்கப்பட்டது. அதன் மீதான சீராய்வு மனு கடந்த ஆண்டு தள்ளுபடி செய்யப் பட்டு விட்ட நிலையில், அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறு சீராய்வு மனு இம்மாதம் 8-ம் தேதி கோடை விடுமுறைக்குப் பிறகு சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் திறக்கப்பட்டவுடன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. அதைத் தொடர்ந்து 69% இடஒதுக்கீடு வழக்கும் விசாரணைக்கு வரவிருக்கிறது.

சுப்ரீம் கோர்ட்டு ஆணையிட்ட பிறகும் தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தத் தவறி விட்ட நிலையில், அதை சுப்ரீம் கோர்ட்டு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. 69% இட ஒதுக்கீட்டை நியாயப்படுத்த சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு ஏன் நடத்தப்படவில்லை? என்று சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பினால், அதற்கு தமிழக அரசிடம் பதில் இல்லை. அரும்பாடுபட்டு அரசியலமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்ட 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை பாதுகாப்பதற்காகவாவது தமிழக அரசின் சார்பில் உடனடியாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப் படவில்லை என்ற காரணத்தை முன்வைத்து 69% இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டால் அதன் விளைவுகளை நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை. அப்படி நடந்தால் தமிழ்நாட்டில் சமூகநீதியை படுகொலை செய்த பெரும்பழி திமுக அரசு மீது தான் விழும். அத்தகைய சூழலை திமுக அரசு ஏற்படுத்தக்கூடாது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது கடினமான ஒன்றல்ல. தமிழக அரசுக்கு இருக்கும் கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்தி ஒரு மாதத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி முடிக்க முடியும். சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கு தமிழக அரசு தயங்கக் கூடாது.

தமிழ்நாட்டில் தனிப்பெரும் அடையாளங்களில் முதன்மையானது 69% இட ஒதுக்கீடு ஆகும். அதைப் பாதுகாக்க வேண்டிய பெரும் பொறுப்பும், கடமையும் அரசுக்கு உண்டு. அந்தக் கடமையை நிறைவேற்றும் வகையில், இனியும் தாமதிக்காமல் தமிழ்நாட்டில் புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின்படி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்