நாக்பூா் வன்முறையில் வங்கதேசத்துக்கு தொடர்பு-சிவசேனா பகீர் குற்றச்சாட்டு
நாக்பூர் வன்முறையில் வங்கதேசத்துக்கு தொடர்பு இருப்பதாக சிவசேனா தலைவர் சஞ்சய் நிருபம் கூறியுள்ளாா்.;
மும்பை,
சத்ரபதி சம்பாஜி நகரில் முகலாய மன்னர் அவுரங்கசீப்பின் கல்லறை உள்ளது. இதை இடிக்க வேண்டும் என மாநிலத்தில் வலதுசாரி அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த 17-ந் தேதி அவுரங்கசீப் கல்லறையை இடிக்க வலியுறுத்தி நாக்பூரில் வலதுசாாி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இஸ்லாமியர்களின் புனித நூல் வாசகங்கள் எரிக்கப்பட்டதாக வதந்தி பரவியது. இதையடுத்து ஏற்பட்ட வன்முறையில் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது. கடை, வீடுகள் சூறையாடப்பட்டது. 33 போலீசார் உள்ளிட்ட பலர் காயமடைந்தனர். வன்முைற குறித்து வழக்குப்பதிவு செய்து உள்ள போலீசார் 100-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்தநிலையில் நாக்பூர் வன்முறையில் வங்கதேசத்துக்கு தொடர்பு இருப்பதாக சிவசேனாவை சேர்ந்த சஞ்சய் நிருபம் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- நாக்பூர் வன்முறையில் ஈடுபட்டவர்களை வங்கதேசத்தில் கண்டுபிடிக்க முடியும். வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்ட ஒருவர் நாசவேலைகளுக்கு சமூகவலைதளத்தை பயன்படுத்த நிதி திரட்டி உள்ளார்.உத்தவ் பாலாசாகேப் தாக்கரே கட்சியின் நிலைப்பாடுகள், அந்த கட்சி இந்துவிரோத கட்சியாக மாறிவிட்டதை காட்டுகிறது. மாதோஸ்ரீயில் (உத்தவ் தாக்கரே வீடு) விரைவில் பால்தாக்கரே படத்துக்கு அருகில் அவுரங்கசீப் படம் போடப்படும். இவ்வாறு அவர் கூறினார். விசாரணை நடந்து வரும் நிலையில் நாக்பூர் வன்முறையில் வங்கதேசம் தொடர்பு இருப்பது பற்றி தற்போது எதுவும் கூற முடியாது என நேற்று முன் தினம் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.