நாக்பூரில் 6 நாட்களுக்குப் பிறகு, ஊரடங்கு முற்றிலுமாக நீக்கம்

நாக்பூரில் ஏற்பட்ட வன்முறைக்குப் பிறகு இன்று ஊரடங்கு உத்தரவு முற்றிலுமாக நீக்கப்பட்டது.;

Update:2025-03-23 17:30 IST
நாக்பூரில் 6 நாட்களுக்குப் பிறகு, ஊரடங்கு முற்றிலுமாக நீக்கம்

நாக்பூர்,

மராட்டியத்தில் உள்ள சத்ரபதி சம்பாஜி நகரில் முகலாய மன்னர் அவுரங்கசீப் கல்லறை உள்ளது. இந்த கல்லறையை அகற்றக்கோரி கடந்த திங்கட்கிழமை இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதில் நாக்பூரில் நடந்த போராட்டத்தில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரான் எரிக்கப்பட்டதாக வதந்தி பரவியது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அன்று இரவு நாக்பூரில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. குறிப்பாக மகால், ஹன்சாபுரி பகுதிகளில் போராட்டக்காரர்கள் பல வாகனங்களை தீவைத்து எரித்தனர். இதில், 42 வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாகின. கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தில் 35 போலீசார் காயம் அடைந்தனர்.

இதற்கிடையே சம்பவம் நடைபெற்று 3 நாட்களுக்கு மேல் ஆகியும் நாக்பூரில் பதற்றம் தணியவில்லை. இதனால் நகரின் முக்கிய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்து. அவுரங்கசீப்பின் கல்லறை அமைந்துள்ள சத்ரபதி சம்பாஜி நகர் மாவட்டத்தில் உள்ள குல்தாபாத்தில் டிரோன்கள் பறக்க தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மார்ச் 11 அன்று தொடர்ந்த வன்முறையை அடுத்து தற்போது பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. இதுவரை 100 க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கலவரத்தின் போது காவல்துறை அதிகாரிகளைத் தாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் பதட்டமான பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்