பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றும் - பாகிஸ்தான் பயிற்சியாளர்

இந்திய அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது.

Update: 2024-09-17 13:17 GMT

image courtesy: AFP

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது. கடந்த இருமுறை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளதால் இம்முறையும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய மண்ணில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் காத்திருக்கிறது.

அதே வேளையில் சொந்த மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி பார்டர் - கவாஸ்கர் கோப்பையை வென்று 10 வருடங்கள் ஆகிவிட்டது. இதனால் இம்முறை இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தயாராகி வருகிறது. எனவே இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றும் என பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் ஜேசன் கில்லெஸ்பி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர்கள் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று கொடுப்பார்கள் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் மிகச்சிறந்த பந்துவீச்சாளர்கள். அதற்கு அவர்களது சாதனைகளே சான்றாகும். பேட் கம்மின்ஸ், மிட்செல் மார்ஷ், ஜோஷ் ஹேசில்வுட், நாதன் லயன் ஆகிய நால்வரும் இந்திய அணிக்கு கடுமையாக சவாலளிப்பார்கள். அண்மைக்காலங்களில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவிடம் தோல்வியை தழுவினாலும், ஆஸ்திரேலிய அணி இம்முறை இந்தியாவை வீழ்த்தும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்