இலங்கை சுதந்திர தினவிழாவில் தமிழில் தேசிய கீதம் புறக்கணிப்பு: மு.க. ஸ்டாலின் கண்டனம்

இலங்கை சுதந்திர தினவிழாவில் தமிழில் தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டதற்கு மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2020-02-04 17:15 GMT
சென்னை,

இலங்கையில் 2015-ம் ஆண்டு அப்போது இருந்த அரசு சிறுபான்மையினரான தமிழர்களுடன் ஒரு நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக சுதந்திர தின விழாவில் தேசிய கீதத்தை சிங்கள மொழியுடன், தமிழில் பாடுவதையும் இணைக்க நடவடிக்கை எடுத்தது. அதன்படி 2016-ம் ஆண்டு முதல் அங்கு நடைபெறும் சுதந்திர தின விழாவில் தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட்டு வந்தது.

இந்த சூழலில் கடந்த ஆண்டு அதிபராக பதவி ஏற்ற கோத்தபய ராஜபக்சே, சுதந்திர தினவிழாவில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்க தடை விதித்து உத்தரவிட்டார். அதன்படி தலைநகர் கொழும்புவில் இன்று கொண்டாடப்பட்ட 72வது சுதந்திர தினவிழாவில் சிங்கள மொழியில் மட்டும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

இந்நிலையில் இலங்கை சுதந்திர தினத்தில் தமிழில் தேசியகீதம் பாடாமல் புறக்கணிக்கப்பட்டதற்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின்  கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், “ இன்று இலங்கை சுதந்திரதினத்தில், வழக்கமாக இசைக்கப்பட்டு வந்த முறையின்படி, தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படாமல் புறக்கணிக்கப் பட்டிருப்பதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கை அதிபரின் சிங்களப் பேரினவாதத்திற்கு தமிழ் மொழியும், தமிழர்களின் உணர்வும் பலிகடா ஆக்கப்பட்டுள்ளதை மத்திய பா.ஜ.க அரசு வேடிக்கை பார்ப்பது வேதனை அளிக்கிறது.

இந்தியா வந்த இலங்கை அதிபரை வரவேற்று - நிதியுதவியும் அறிவித்து பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் வழியனுப்பி வைத்தது இலங்கையில் வாழும் தமிழர்களின் கண்ணியத்தைச் சிதைத்து- சிங்களவர்களுக்கு அடிமைகளாக்குவதற்கா? என்ற சந்தேகம் எழுகிறது. எனவே, பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்கள், தமிழ் மொழி சம்பந்தப்பட்ட உணர்வு பூர்வமான இந்தப் பிரச்சினையில் தலையிட்டு, இலங்கை சுதந்திர தின விழாவில் தேசிய கீதம் தமிழில் பாடப்படாததற்கு இலங்கைத் தூதரை உடனடியாக அழைத்து, கண்டனம் தெரிவிக்க வெளியுறவுத்துறை அமைச்சருக்கு உத்தரவிட வேண்டும்” என்று கேட்டுக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்

மேலும் செய்திகள்