டெல்லி புறநகர் என்சிஆர் போன்று லக்னோ உள்ளிட்ட ஏழு மாவட்டங்களை இணைத்து உ.பி தலைநகரப் பகுதி அமைக்க திட்டம்!

டெல்லியில் உள்ள என்சிஆர் போன்று “உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகரப் பகுதி(எஸ்சிஆர்)” அமைக்கப்பட வேண்டும்.

Update: 2022-09-03 04:27 GMT

லக்னோ,

தலைநகர் டெல்லியை ஒட்டி அமைந்துள்ள உத்தரபிரதேசத்தின் பகுதிகளில், மக்கள் பெருக்கம் அதிகரித்து வருகிறது.

டெல்லி புறநகர் என்சிஆர் பகுதியான "தேசிய தலைநகர் மண்டலம் (என்சிஆர்)", டெல்லிக்கு அருகாமையில் இருப்பதாலும், பன்னாட்டு நிறுவனங்களின் அதிவேக சேர்க்கையாலும் வளர்ச்சி பெற்ற பகுதிகளாக உள்ளன. அதில் நொய்டா , குருகிராம் போன்ற இடங்கள் அடங்கும்.

இந்நிலையில், உத்தரபிரதேச தலைநகர் லக்னோ இன்று ஒரு பெருநகரத்தின் வடிவத்தில் அதிநவீன நகர்ப்புற வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது என்று முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

டெல்லியை போல உத்தரபிரதேசத்தின் பகுதிகளை மேம்படுத்தும் திட்டம் குறித்து யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பேசுகையில்:

பல்வேறு நகரங்களில் இருந்து மக்கள் இங்கு வந்து தங்களுடைய நிரந்தர வசிப்பிடத்தை உருவாக்க விரும்புகிறார்கள். சுற்றுவட்டார மாவட்டங்களிலும் மக்கள்தொகை அழுத்தம் அதிகரித்து வருவதால், திட்டமிடப்படாத வளர்ச்சி குறித்த புகார்களும் சில நேரங்களில் பெறப்படுகின்றன.

இத்தகைய சூழ்நிலையில், எதிர்காலத் தேவையைக் கருத்தில் கொண்டு, டெல்லியில் உள்ள "தேசிய தலைநகர் மண்டலம் (என்சிஆர்)" போன்று "உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகரப் பகுதி (எஸ்சிஆர்)" அமைக்கப்பட வேண்டும்.

லக்னோ மற்றும் உன்னாவ், சீதாபூர், ரேபரேலி, பாரபங்கி, கான்பூர் நகர் மற்றும் கான்பூர் தேஹாத் ஆகியவை இந்த மாநில தலைநகர் பகுதியில் சேர்க்கப்படலாம்.

இந்த திட்டம் குறித்து அனைத்து பரிமாணங்களையும் ஆய்வு செய்து விவாதித்த பிறகு, விரிவான செயல் திட்டத்தை விரைவில் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கூறினார்.

அரசின் இந்த திட்டத்தால், இந்த மாவட்டங்களின் வளர்ச்சி வேகம் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. இதனுடன், 'மாநில தலைநகர் பிராந்தியத்தை' உருவாக்க, லக்னோ சுற்றியுள்ள அனைத்து நகரங்களுடனும் இணைப்பு மேம்படுத்தப்படும் என்றும் நம்பப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்