மாமனாரை அடித்துக்கொன்ற மருமகள் குடும்பத்தினர் - அதிர்ச்சி சம்பவம்

மாமனாரை மருமகள் குடும்பத்தினர் அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-09-20 15:21 GMT

சண்டிகர்,

அரியானா மாநிலம் குருகிராம் மாவட்டம் படோடி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் குமார் (வயது 55). இவரது மனைவி சாவித்ரி. இந்த தம்பதிக்கு ராஜேந்திரன் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். ராஜேந்திரனுக்கு பபிதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. ராஜேந்திரன் தனது தந்தை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.

இதனிடையே, ராஜேந்திரனுக்கும் அவரது மனைவி பபிதாவுக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன் குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பபிதா தனது குழந்தையுடன் மாமனார் வீட்டில் இருந்து வெளியேறி தனது தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார். மேலும், இந்த பிரச்சினை குறித்து தனது குடும்ப உறுப்பினர்களிடம் பப்தா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பபிதாவின் தந்தை, சகோதரர்கள் 4 என மொத்தம் 5 பேர் நேற்று மாமனார் சுரேஷின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு வீட்டில் இருந்த சுரேஷிடம் 5 பேரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம் முற்றிய நிலையில் பபிதாவின் சகோதரர்கள், தந்தை என 5 பேரும் சுரேஷை கடுமையாக தாக்கினர். தடுக்க முயன்ற சுரேஷின் மனைவி சாவித்ரி மற்றும் மகளையும் 5 பேரும் தாக்கியுள்ளனர்.

தங்களை காப்பாற்றும்படி சாவித்ரி உதவி கேட்டு கதறியுள்ளார். அவரின் குரல் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டனர். இதனால், தாக்குதல் நடத்திய 5 பேரும் ஆட்டோவில் தப்பிச்சென்றனர்.

தாக்குதலில் படுகாயமடைந்த சுரேஷை மீட்ட அக்கம்பக்கத்தினர், அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால், படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுரேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்