வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசு உதவவில்லை - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

மேற்கு வங்காளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு எந்த உதவியும் செய்யவில்லை என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2024-09-29 21:50 GMT

கோப்புப்படம்

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. அங்கு வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். சிலிகுரியில் வெள்ளச்சேதத்தை ஆய்வு செய்த மம்தா பானர்ஜி, பின்னர் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மாநிலத்தில் வெள்ள பாதிப்பை எதிர்கொள்ள மத்திய அரசு உதவவில்லை. வடக்கு வங்கம் வௌ்ளத்தில் தத்தளிக்கிறது. கூச் பெகார், ஜல்பைகுரி மற்றும் அலிபுர்துவார் உள்ளிட்ட மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வௌ்ள பாதிப்புகளை திரிணாமுல் அரசு போர்க்கால அடிப்படையில் சமாளித்து வருகிறது. ஆறுகளின் அருகே வசிப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு வௌியேற்ற பொது முகவரி அமைப்பை மாநில அரசு தொடங்கி உள்ளது.

பாஜக தலைவர்கள் தேர்தல் நேரத்தில் மட்டுமே மேற்குவங்காளத்துக்கு வருவார்கள். பின்னர் குறிப்பாக இந்த மாநிலத்தை மறந்து விடுவார்கள். மேற்குவங்காளத்துக்கு மட்டுமே வௌ்ள நிவாரணம் வழக்கப்படுவதில்லை. இயற்கை பேரிடர்களை சமாளிக்க மேற்குவங்காளத்துக்கு பாஜக அரசு உதவவில்லை. நாங்கள் பலமுறை நினைவூட்டியும் பராக்கா அணையின் பராமரிப்பு பணிகளை மத்திய அரசு செய்யவில்லை. இதனால் அணையின் கொள்ளளவு வெகுவாக குறைந்து விட்டது. டார்ஜிலிங் மலைப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள பெரிய நிலச்சரிவுகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீரமைக்கும் பணிகளில் ராணுவ வீரர்களுடன் மாநில அரசும் இணைந்து செயல்பட்டு வருகிறது" என்று மம்தா பானர்ஜி கூறினார்.

அதேநேரம் ஆய்வுக்கூட்டத்துக்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த மம்தாவிடம், வெள்ள பாதிப்புக்கு உதவி கேட்டு பிரதமரை அணுகுவீர்களா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், 'நான் பிரதமருக்கு கடிதம் எழுதினால், அவரது மந்திரிகளில் ஒருவர் பதிலளிப்பார். அது சரியல்ல. ஒருவேளை நான் அதை மீண்டும் சரிசெய்து மற்றொரு கடிதத்தை அனுப்ப வேண்டியிருக்கும்' என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்