மேற்கு வங்காளத்தில் ஜூனியர் டாக்டர்கள் மீது தாக்குதல்; நாளை பணிநிறுத்தம் என அறிவிப்பு

மேற்கு வங்காளத்தில் டாக்டர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில், சட்டம் ஒழுங்கு முற்றிலும் மோசமடைந்து உள்ளது என்று பா.ஜ.க.வின் மேற்கு வங்காள தலைவர் சுகந்த மஜும்தார், மற்றொரு தலைவரான திலீப் கோஷ் ஆகியோர் தெரிவித்து உள்ளனர்.

Update: 2024-09-29 15:47 GMT

கோப்புப்படம்

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரருகே சகோர் தத்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 30 வயது பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் ஆத்திரமடைந்த அவருடைய உறவினர்கள், டாக்டர்கள் மற்றும் நர்சுகள் மீது நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தினர். இதனை கண்டித்து இளநிலை டாக்டர்கள் மற்றும் நர்சுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை சந்திப்பதற்காக பாரக்பூர் காவல் ஆணையாளர் அலோக் ரஜோரியா மருத்துவமனைக்கு நேரில் சென்றார். இந்த சம்பவத்தில், சி.சி.டி.வி. பதிவுகளின் அடிப்படையில், 4 பேர் இன்று கைது செய்யப்பட்டனர்.

இதேபோன்று, மேற்கு வங்காள சுகாதார செயலாளர் நாராயண் ஸ்வரூப் நிகாம் மருத்துவமனைக்கு நேரில் சென்று, பணி நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த டாக்டர்கள் மற்றும் நர்சுகளை சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து, இன்று முதல் கூடுதல் சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தப்படும் என்று நிகாம் கூறியுள்ளார்.

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த ஆகஸ்டு 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த வழக்கை போலீசார் விசாரித்த நிலையில், கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவையடுத்து, சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரத்தில், டாக்டர்களுக்கு பாதுகாப்பு கோரியும், பெண் டாக்டருக்கு நீதி வேண்டும் என கோரியும், சம்பவ நாளில் இருந்து கொல்கத்தா நகரில் ஒரு மாதத்திற்கும் கூடுதலாக டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் மற்றொரு சம்பவத்தில் சிகிச்சையின்போது பெண் மரணம் அடைந்த விவகாரத்தில், டாக்டர்கள் மற்றும் நர்சுகள் மீது தாக்குதல் நடத்திய நிலையில் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அந்த பெண்ணின் உறவினர்களான 4 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். மருத்துவமனையில் பாதுகாப்பு தொடர்புடைய சில விசயங்கள் பற்றி இன்று பேசப்பட்டது என காவல் ஆணையாளர் ரஜோரியா கூறினார்.

இந்த விசயத்தில், பாதுகாப்பு கோரி வலியுறுத்திய அரசின் வாக்குறுதிகள் காற்றில் விடப்பட்டது போன்று உணர்ந்துள்ள டாக்டர்கள் வருத்தம் தெரிவித்து உள்ளனர். இதனை தொடர்ந்து, அவர்கள் நாளை பணிநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து உள்ளனர்.

இதன்படி, ஜூனியர் டாக்டர்கள் நாளை பணிநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இதுபற்றி பா.ஜ.க.வின் மேற்கு வங்காள தலைவர் சுகந்த மஜும்தார், மற்றொரு தலைவரான திலீப் கோஷ் ஆகியோர், மருத்துவர்களுக்கான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. அவர்களின் குரல் கேட்கப்படாமல் உள்ளது.

இதனால், டாக்டர்கள் ஒவ்வொருவராக தாக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. மேற்கு வங்காளத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் மோசமடைந்து உள்ளது என்று அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்