பெண்களுக்கு ஆதரவாகவும், பாதுகாப்பாகவும் பா.ஜனதா இல்லை - சித்தராமையா குற்றச்சாட்டு

பெண்களுக்கு ஆதரவாகவும், பாதுகாப்பாகவும் பா.ஜனதா இல்லை என்று சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2023-01-17 01:25 GMT

பெங்களூரு,

பெங்களூருவில் நடந்த காங்கிரஸ் மகளிர் மாநாட்டில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பேசியதாவது:-

கர்நாடகாவில் பாஜக ஆட்சிக்கு வந்து 3½ ஆண்டுகள் ஆகி விட்டது. தேர்தலின் போது பெண்களிடம் அளித்த எந்த வாக்குறுதிகளையும் பா.ஜனதா நிறைவேற்றவில்லை. 3½ ஆண்டுகால ஆட்சியில் பெண்களுக்கென எந்த திட்டத்தையும் கொண்டு வந்து பா.ஜனதா அரசு செயல்படுத்தவில்லை.

2018-ம் ஆண்டு நடந்த தேர்தலின் போது 600 வாக்குறுதிகளை மக்களுக்கு பா.ஜனதா கொடுத்திருந்தது. அவற்றில் 10 சதவீத வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றி இருக்கிறார்கள். நான் முதல்-மந்திரியாக இருந்தபோது 100 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி இருந்தேன்.

இந்த நாடு வளர்ச்சி அடைய வேண்டும் என்றால், பெண்கள் முன்னேற்றம் அடைய வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது பெண்களுக்கான வேலை வாய்ப்பை 30 சதவீதத்தில் இருந்து 33 சதவீதமாக உயர்த்தி இருந்தோம். பெண்களுக்கு ஆதரவாகவும், பாதுகாப்பாகவும் பா.ஜனதா இல்லை.

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கான இட ஒதுக்கீடு அதிகரிக்கப்படும். வேலை வாய்ப்பு, அரசியல் ஆகியவற்றில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். சட்டசபை தேர்தல், மேல்-சபை தேர்தலிலும் பெண்களுக்கான இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்