விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இத்தாலி வீராங்கனை பாவ்லினி


விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இத்தாலி வீராங்கனை பாவ்லினி
x

இத்தாலி வீராங்கனை பாவ்லினி முதல் முறையாக விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

லண்டன்,

'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் ஜாஸ்மின் பாவ்லினி (இத்தாலி) சரிவில் இருந்து மீண்டு வந்து 2-6, 6-4, 7-6 (10-8) என்ற செட் கணக்கில் டோனா வெகிச்சை (குரோஷியா) போராடி தோற்கடித்து முதல் முறையாக விம்பிள்டனில் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இந்த வெற்றியை வசப்படுத்த அவருக்கு 2 மணி 51 நிமிடங்கள் தேவைப்பட்டது. பெண்கள் பிரிவில் அதிக நேரம் நீடித்த விம்பிள்டன் அரைஇறுதி ஆட்டம் இதுதான். அத்துடன் 'ஓபன் எரா' வரலாற்றில் (1968-ம் ஆண்டில் இருந்து) விம்பிள்டனில் இறுதி சுற்றை எட்டிய முதல் இத்தாலி வீராங்கனை என்ற பெருமையை பாவ்லினி பெற்றார்.

ஏற்கனவே பிரெஞ்சு ஓபனில் இறுதி ஆட்டத்தில் தோற்றிருந்த பாவ்லினி இந்த முறை கிராண்ட்ஸ்லாம் கனவை நனவாக்க முன்பை விட தீவிரமாக இருப்பார். அவர் இறுதி ஆட்டத்தில் எலினா ரைபகினா (கஜகஸ்தான்) அல்லது கிரெஜ்சிகோவா (செக்குடியரசு) ஆகியோரில் ஒருவருடன் மோத உள்ளார்.


Next Story