ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: சிந்து, ஸ்ரீகாந்த் கால்இறுதிக்கு தகுதி


ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: சிந்து, ஸ்ரீகாந்த் கால்இறுதிக்கு தகுதி
x

கோப்புப்படம் 

கிரண் ஜார்ஜ், மிதுன் மஞ்சுநாத் ஆகியோர் தங்களது ஆட்டங்களில் தோல்வி கண்டு வெளியேறினர்.

சிட்னி,

ஆஸ்திரேலிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் 'நம்பர் ஒன்' வீரரான இந்தியாவின் ஸ்ரீகாந்த் 21-10, 21-17 என்ற நேர்செட்டில் சீன தைபேயின் சு லி யாங்கை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார்.

இதே போல் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் சரிவில் இருந்து மீண்டு 19-21, 21-19, 21-13 என்ற செட் கணக்கில் சீன தைபேயின் சி யூ ஜென்னை வீழ்த்தி கால்இறுதியை எட்டினார். பிரியான்ஷூ ரஜாவத் 21-8, 13-21, 21-19 என்ற செட் கணக்கில் சீன தைபேயின் வாங் சூ வெய்யை விரட்டியடித்தார். மற்ற இந்திய வீரர்கள் கிரண் ஜார்ஜ், மிதுன் மஞ்சுநாத் ஆகியோர் தங்களது ஆட்டங்களில் தோல்வி கண்டு வெளியேறினர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்றவரான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-14, 21-10 என்ற நேர்செட்டில் சக நாட்டு வீராங்கனை ஆகார்ஷி காஷ்யப்பை தோற்கடித்து கால்இறுதிக்கு தகுதி பெற்றார். பெண்கள் இரட்டையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி 10-21, 20-22 என்ற நேர்செட்டில் ஜப்பானின் மயு மட்சுமோடோ-வாகனா நகஹரா இணையிடம் வீழ்ந்தது.


Next Story