'இளம் வீரர் சுயாஷ் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பந்துவீச்சாளர்' - கொல்கத்தா கேப்டன் நிதிஷ் ராணா


இளம் வீரர் சுயாஷ் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பந்துவீச்சாளர் - கொல்கத்தா கேப்டன் நிதிஷ் ராணா
x

ஷர்துல் தாக்குர் தனது அதிரடியால் ஆட்டத்தின் போக்கை மாற்றினார் என நிதிஷ் ராணா கூறினார்.

கொல்கத்தா,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில், கொல்கத்தா ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை பந்தாடி முதல் வெற்றியை பதிவு செய்தது.

வெற்றிக்கு பிறகு கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணா கூறுகையில், 'தொடக்கத்தில் விரைவாக விக்கெட்டை இழந்தாலும் நாங்கள் நன்றாக போராடினோம். தொடக்க ஆட்டக்காரர் குர்பாஸ் அருமையாக பேட்டிங் செய்தார். ஷர்துல் தாக்குர் தனது அதிரடியால் ஆட்டத்தின் போக்கை மாற்றினார். எங்களது சுழற்பந்து வீச்சு நன்றாக இருந்தது.

அவர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தியது சிறப்பானதாகும். சுயாசை, புதிரான சுழற்பந்து வீச்சாளர் என்று சொல்லமாட்டேன். அவர் வழக்கமான லெக் ஸ்பின்னர் தான். ஆனால் அவரது பந்து வீச்சு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகும். ஏனெனில் அவர் சுழற்பந்தை கையை வேகமாக சுழற்றி வீசுகிறார். எனவே அவரது பந்து வீச்சை துல்லியமாக கணித்து ஆடுவது மிகவும் சிரமம். அவர் போகப்போக இன்னும் முன்னேற்றம் காணுவார்.

வருண் சக்ரவர்த்தி பழைய நிலைக்கு திரும்பி இருப்பது எங்களுக்கு மிகவும் முக்கியமானது. கடந்த சீசனில் அவர் சோபிக்கவில்லை. ஆனால் இந்த முறை நன்றாக பந்து வீசுகிறார். ஷர்துல் தாக்குரின் பேட்டிங் திறமை மீது எனக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு. ஆனால் அவர் எதிர்பார்ப்பை காட்டிலும் அதிரடியில் வெளுத்து கட்டினார்.

உங்கள் ஆல்-ரவுண்டர் இந்த மாதிரி பேட்டிங் செய்து தனிநபராக ஆட்டத்தின் போக்கை மாற்றினால் அதனை விட ஒரு கேப்டனுக்கு வேறு என்ன வேண்டும். கொரோனா தாக்கம் காரணமாக நீண்ட கால இடைவெளிக்கு பிறகு தற்போது தான் கொல்கத்தா மண்ணில் விளையாடுகிறோம். ரசிகர்களின் ஆர்ப்பரிப்பு எப்படி இருக்கும் என்பது எனக்கு தெரியும். இந்த வெற்றியை விட சிறந்த பரிசை நான் ரசிகர்களுக்கு வழங்கி இருக்க முடியாது' என்றார்.


Next Story