ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல்லுக்கு அன்பு பரிசளித்த விராட் கோலி!


ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல்லுக்கு அன்பு பரிசளித்த விராட் கோலி!
x

image courtesy; twitter/ @ICC

தினத்தந்தி 20 Nov 2023 5:04 AM GMT (Updated: 20 Nov 2023 8:24 AM GMT)

உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

அகமதாபாத்,

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 5-ந்தேதி இந்தியாவில் தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் மற்றும் அரைஇறுதி முடிவில் இந்தியா- ஆஸ்திரேலியா இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

இந்த நிலையில் இவ்விரு அணிகளில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று அரங்கேறியது.

இந்த போட்டியில் 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் எடுத்தது.

இதனை தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 43 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்தது. இதனால், இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா உலகக்கோப்பையை வென்றது. டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகன் விருதையும், இந்திய வீரர் விராட் கோலி தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.

இந்த போட்டி முடிந்ததும் இந்திய வீரர் விராட் கோலி, தான் கையெழுத்திட்ட இந்திய ஜெர்சியை ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல்லுக்கு பரிசளித்தார். இருவரும் ஐபிஎல்-ல் பெங்களூரு அணிக்காக ஒன்றாக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story