டி.என்.பி.எல்: அஸ்வின் அசத்தல் பந்துவீச்சு...திருச்சியை வீழ்த்திய திண்டுக்கல் டிராகன்ஸ்


டி.என்.பி.எல்: அஸ்வின் அசத்தல் பந்துவீச்சு...திருச்சியை வீழ்த்திய திண்டுக்கல் டிராகன்ஸ்
x

Image Courtesy: @DindigulDragons

திண்டுக்கல் டிராகன்ஸ் தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

சேலம்,

8-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி நேற்று சேலத்தில் தொடங்கியது . சேலம், நெல்லை, கோவை, நத்தம் (திண்டுக்கல்), சென்னை ஆகிய 5 நகரங்களில் நடைபெறும் இந்த போட்டியில் 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

இதில் சேலத்தில் இன்று மாலை 3.15 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய திண்டுக்கல் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. திண்டுக்கல் தரப்பில் அதிகபட்சமாக ஷிவம் சிங் 78 ரன்கள் எடுத்தார்.

திருச்சி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஈஸ்வரன் ஹாட்ரிக் உடன் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 161 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக அர்ஜூன் மூர்த்தி மற்றும் வசீம் அகமது ஆகியோர் களம் இறங்கினர். இதில் வசிம் அகமது 6 ரன், அர்ஜூன் மூர்த்தி 18 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

இதையடுத்து களம் இறங்கிய தமிழ் திலீபன் 5 ரன், ஷ்யாம் சுந்தர் 23 ரன், ஜாபர் ஜமால் 13 ரன், சஞ்சய் யாதவ் 24 ரன், ஆண்டனி தாஸ் 3 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இறுதியில் திருச்சி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் 16 ரன் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் வெற்றி பெற்றது. திண்டுக்கல் டிராகன்ஸ் தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தொடர்ந்து இன்று நடைபெறும் 2வது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் - மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோத உள்ளன.


Next Story