தோனி மற்றும் கோலியிடம் உள்ள அதே திறமை அந்த இளம் வீரரிடமும் உள்ளது - ஆகாஷ் சோப்ரா


தோனி மற்றும் கோலியிடம் உள்ள அதே திறமை அந்த இளம் வீரரிடமும் உள்ளது - ஆகாஷ் சோப்ரா
x

image courtesy: AFP

சுப்மன் கில் வருங்கால சூப்பர் ஸ்டாராக வரும் விஷயத்தை கொண்டுள்ளார் என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமுறை சிறந்த வீரராக சுப்மன் கில் வருவார் என்று அனைவரும் கூறி வருகின்றனர். அதற்கேற்றவாறே பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வரும் 3 பார்மட்களிலும் அணியில் தவிர்க்க முடியாத வீரராக இருந்து வருகிறார். அதனால் அவரை இந்தியாவின் வருங்கால கேப்டனாக வளர்க்கும் நோக்கில் பிசிசிஐ தற்போதே துணை கேப்டனாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் எம்எஸ் தோனி, விராட் கோலி போல போட்டியின் துடிப்பை புரிந்து விளையாடும் திறமை சுப்மன் கில்லிடம் இருப்பதாக ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "சுப்மன் கில் போட்டியின் துடிப்பை நன்றாக புரிந்து கொள்கிறார். அவர் போட்டி எங்கே செல்கிறது என்பதை 100% புரிந்து கொள்கிறார். அதனால் எங்கே நாம் செல்ல வேண்டும்? எதை எடுத்துக் கொள்ள வேண்டும்? தமக்கு தகுந்தாற்போல் எப்படி போட்டி நகரும் என்பதை அவர் உணர்ந்து செயல்படுகிறார். சுப்மன் கில் வருங்கால சூப்பர் ஸ்டாராக வரும் விஷயத்தை கொண்டுள்ளார். அவரை நீங்கள் டி20 உலகக்கோப்பையில் எடுக்காதது பரவாயில்லை.

தற்போது இளமையாக இருக்கும் அவர் 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடுவார். ஐபிஎல் தொடரில் ஒருமுறை அவர் 900 ரன்கள் அடித்துள்ளார். எனவே இளமையாக இருக்கும் அவரால் டி20யில் முன்னேறுவதற்கான வழியை கண்டறிய முடியும். ரோகித் சர்மா 2011 உலகக்கோப்பையில் விளையாடவில்லை. ஆனால் அவர் தற்போது இந்தியாவின் வெற்றிகரமான கேப்டனாக செயல்பட்டு வருகிறார்" என்று கூறினார்.


Next Story