இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: 2-வது நாள் முடிவில் வலுவான நிலையில் நியூசிலாந்து


இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: 2-வது நாள் முடிவில் வலுவான நிலையில் நியூசிலாந்து
x

image courtesy: twitter/@ICC

இலங்கை அணி முதல் இன்னிங்சில் 305 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

காலே,

இலங்கை - நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை 91.5 ஓவர்களில் 305 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் 114 ரன்கள் குவித்தார். நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக வில்லியம் ஒரூர்க் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க ஆட்டக்காரர் ஆன கான்வே 17 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டகாரர் ஆன டாம் லதாம் 70 ரன்களிலும், அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்த வில்லியம்சன் 55 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா தனது பங்குக்கு 39 ரன்கள் அடித்தார்.

இதனையடுத்து கை கோர்த்த டேரில் மிட்செல் மற்றும் டான் பிளண்டெல் சிறப்பாக விளையாடி, 2-வது நாளில் மேற்கொண்டு விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டனர்.

2-வது நாள் முடிவில் நியூசிலாந்து 4 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்கள் அடித்துள்ளது. கைவசம் 6 விக்கெட்டுகள் உள்ள நிலையில், இன்னும் 50 ரன்கள் மட்டுமே பின்தங்கி உள்ளதால் இந்த இன்னிங்சில் நியூசிலாந்து வலுவான நிலையிலேயே உள்ளது. டேரில் மிட்செல் 41 ரன்களுடனும், டாம் பிளண்டெல் 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

நாளை 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.


Next Story