டி20 உலகக்கோப்பை தோல்வி; வலுவான அணியாக மீண்டு வர வேண்டும் - நிகோலஸ் பூரன்


டி20 உலகக்கோப்பை தோல்வி; வலுவான அணியாக மீண்டு வர வேண்டும் - நிகோலஸ் பூரன்
x

Image Courtesy: AFP 

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் கிடைத்த தோல்வியால் கேப்டன் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என நிகோலஸ் பூரன் தெரிவித்துள்ளார்.


ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பைப் போட்டியில் முதல் சுற்றில் மோசமாக விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, சூப்பர் 12 தகுதி பெறாமல் வெளியேறியது. இதையடுத்து தலைமைப் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு அவர் விடைபெறுகிறார்.

இந்நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் கேப்டன் நிகோலஸ் பூரன் தன்னுடைய நிலைப்பாடு குறித்து தெரிவித்ததாவது:-

எதிர்காலம் எப்படியிருக்கும் எனத் தெரியவில்லை. அனைவருக்கும் இது நல்ல பாடமாக இருந்தது. அடுத்து என்ன நடக்கும் என்பதைக் காலம் தான் சொல்லவேண்டும். இப்போது அவரவர் திறமையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஓய்வு, காயத்தைக் குணமாக்கும்.

உள்ளுக்குள் மிகுந்த வேதனையுடன் உள்ளோம். இந்த வேதனையை ஊக்கமாக்கிக்கொள்ள வேண்டும். வலுவான அணியாக மீண்டு வர வேண்டும். கேப்டன் பதவி குறித்து கடந்த சில மாதங்களாக யோசனை செய்து வருகிறேன். கிரிக்கெட் விளையாடுவது என் கனவு. இதற்கு முன்பு மிகப்பெரிய சரிவைச் சந்தித்துள்ளேன் (கார் விபத்தில் காலில் காயம் ஏற்பட்டு பிறகு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது).

இப்போது இன்னொரு சோதனை. நான் சவால்களை எதிர்கொள்வதில் ஆர்வம் உள்ளவன். இது இன்னொரு சவால். இந்தத் தோல்வி என்னைத் தடுத்து நிறுத்தாது. இந்த அனுபவங்களில் இருந்து பாடங்கள் கற்றுக் கொள்வேன் என்றார்.


Next Story