சிராஜ், துபே வெளியே.. ஆச்சரியமளிக்கும் வகையில் முதல் போட்டிக்கான இந்திய அணியை அறிவித்த ஸ்ரீசாந்த்


சிராஜ், துபே வெளியே.. ஆச்சரியமளிக்கும் வகையில் முதல் போட்டிக்கான இந்திய அணியை அறிவித்த ஸ்ரீசாந்த்
x

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி முதலாவது ஆட்டத்தில் அயர்லாந்துடன் நாளை பலப்பரீட்சை நடத்த உள்ளது.

மும்பை,

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பான துவக்கத்தை பெற்றுள்ளது. இந்தத் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வெல்லும் இலட்சியத்துடன் களமிறங்கியுள்ளது. அந்த பயணத்தில் பயிற்சி போட்டியில் வங்காளதேசத்தை வீழ்த்திய இந்திய அணி தங்களுடைய முதலாவது ஆட்டத்தில் நாளை நியூயார்க் நகரில் அயர்லாந்தை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில் அயர்லாந்துக்கு எதிரான போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை சில முன்னாள் வீரர்கள் வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் இணைந்துள்ள முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் துவக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். ஆனால் மிடில் ஆர்டரில் சிஎஸ்கே அணியில் சிறப்பாக விளையாடி இந்தியாவுக்காக தேர்வான ஷிவம் துபேவை கழற்றி விட்டுள்ள அவர் ஹர்திக் பாண்ட்யா மற்றும் ஜடேஜா ஆகியோரை மட்டுமே ஆல் ரவுண்டர்களாக தேர்வு செய்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் ஓபனிங் களமிறங்க வேண்டும். விராட் கோலி 3-வது இடத்திலும் சூர்யகுமார் யாதவ் 4வது இடத்திலும் விளையாட வேண்டும். ரிஷப் பண்ட் 5வது இடத்தில் களமிறங்க வேண்டும். 6 மற்றும் 7வது இடங்களில் ஹர்திக் பாண்ட்யா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இருப்பார்கள். அதைத் தொடர்ந்து பவுலர்கள்" என்று கூறினார்.

அந்த வகையில் தம்முடைய சொந்த மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சு சாம்சனை கழற்றி விட்டுள்ள அவர் குல்தீப் யாதவ் - சஹால் ஆகிய சுழல் பந்து வீச்சு ஜோடியை ஒன்றாக தேர்வு செய்துள்ளார். அதனால் பும்ரா, அர்ஷ்தீப் ஆகியோரை மட்டுமே தேர்ந்தெடுத்துள்ள அவர் சிராஜை கழற்றி விட்டுள்ளார்.

ஸ்ரீசாந்த் தேர்வு செய்த இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சஹால்.


Next Story