சாய் சுதர்சன் அதிரடி சதம்... திருப்பூரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய கோவை


சாய் சுதர்சன் அதிரடி சதம்... திருப்பூரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய கோவை
x

கோவை அணி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.

திண்டுக்கல்,

8-வது டி.என்.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடித்த கோவை கிங்ஸ் (12 புள்ளி), திருப்பூர் தமிழன்ஸ் (8 புள்ளி), சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (8 புள்ளி), திண்டுக்கல் டிராகன்ஸ் (8 புள்ளி) ஆகிய அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறின. நெல்லை ராயல் கிங்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ், முன்னாள் சாம்பியன் மதுரை பாந்தர்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் ஆகிய அணிகள் வெளியேறின.

இந்த நிலையில் திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று நடந்த இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் புள்ளி பட்டியலில் முதல் இரு இடம் வகிக்கும் ஷாருக்கான் தலைமையிலான நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ் அணியும், சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணியும் மோதின.

இதில் டாஸ் வென்ற திருப்பூர் தமிழன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அமித் சாத்விக், துஷார் ரஹேஜா ஜோடி நிலைத்து நின்று ஆடி அரைசதம் கடந்தனர். அமித் சாத்விக் 67 ரன்களில் கேட்ச் ஆனார். துஷார் ரஹேஜா 55 ரன்களில் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

முகமது அலி 45 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் திருப்பூர் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 201 ரன்கள் என்ற இலக்கை நோக்கி கோவை அணி விளையாடியது.

தொடக்க ஆட்டக்காரர்களான விக்னேஷ் ரன் ஏதும் எடுக்காமலும், சுஜய்19 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். சிறிது நேரத்தில் சுரேஷ் குமாரும் 5 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் கோவை அணி 53 ரன்களுக்கு 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடிமாறியது.

எனினும், அதிரடி ஆட்டக்காரர் சாய் சுதர்சன் மற்றும் முகிலேஷ் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். குறிப்பாக சாய் சுதர்சன் அதிரடியில் மிரட்டினார். எதிரணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த அவர், சதமடித்து அசத்தினார். அவர் வெறும் 56 பந்துகளில் 9 பவுண்டரி, 9 சிக்சருடன் 123 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார். முகிலேசும் தன் பங்குக்கு 48 ரன்கள் எடுத்தார்.

இறுதியில் கோவை அணி 18.5 ஓவர்களில் இலக்கை கடந்தது. இதன் மூலம் கோவை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.


Next Story