ரோகித், விராட் போன்ற சீனியர் வீரர்களை விமர்சித்த ராபின் உத்தப்பா


ரோகித், விராட் போன்ற சீனியர் வீரர்களை விமர்சித்த ராபின் உத்தப்பா
x

ஒருநாள் உலகக்கோப்பை தொடர் முடிந்ததுமே விராட் கோலி, ரோகித் சர்மா, போன்ற சீனியர்கள் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கியிருக்க வேண்டும் என்று ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்

புதுடெல்லி,

20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ந் தேதி (இந்திய நேரப்படி ஜூன் 2ம் தேதி) முதல் 29-ந் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க உள்ளது. இந்த தொடரில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களம் இறங்க உள்ளது. அதில் விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, பும்ரா, சூர்யகுமார் யாதவ், சிராஜ் உள்ளிட்ட நட்சத்திர சீனியர் வீரர்கள் தேர்வாகியுள்ளனர்.

அதேபோல ஷிவம் துபே, ஜெய்ஸ்வால், அர்ஷ்தீப் சிங் போன்ற சில வீரர்களும் தேர்வாகியுள்ளனர். ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் மட்டுமே தேர்வானது பல ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

இந்நிலையில் கடந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடர் முடிந்ததுமே விராட் கோலி, ரோகித் சர்மா, போன்ற சீனியர்கள் இந்தியாவின் நலனை கருதி டி20 கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கியிருக்க வேண்டும் என்று ராபின் உத்தப்பா விமர்சித்துள்ளார். அதனால் இம்முறையும் இந்தியா கோப்பையை வெல்வது கடினம் என்று தெரிவிக்கும் அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு:-

"இதற்காக நான் விமர்சனங்களை சந்திக்கலாம். ஆனால் அதை நான் எதிர்கொள்ள தயார். அவர்கள் கடந்த ஒருநாள் உலகக்கோப்பை முடிந்ததுமே டி20 கிரிக்கெட்டிலிருந்து நகர்ந்திருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இந்த உலகக்கோப்பையில் இளம் வீரர்கள் விளையாட வேண்டும் என்று நான் கருதுகிறேன். ஏனெனில் சீனியர் வீரர்கள் விளையாடுவதற்கான நேரத்தை போதுமான அளவு பெற்றனர். மறுபுறம் இந்த இளம் வீரர்கள் முழு திறமையுடன் காத்திருக்கின்றனர். சொல்லப்போனால் அவர்கள் ஐ.பி.எல். தொடரில் தொடர்ச்சியாக அசத்தி வருகின்றனர். எனவே சுப்மன் கில் போன்ற இளம் வீரர்கள் முதன்மை இந்திய அணியில் இருந்திருக்க வேண்டும்" என்று கூறினார்.


Next Story