பயிற்சி ஆட்டம்; ரிஷப் பண்ட் அரைசதம்...இந்தியா 182 ரன்கள் குவிப்பு


பயிற்சி ஆட்டம்; ரிஷப் பண்ட் அரைசதம்...இந்தியா 182 ரன்கள் குவிப்பு
x

Image Courtesy: @BCCI

இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 53 ரன்கள் எடுத்தார்.

நியூயார்க்,

20 அணிகள் கலந்துகொள்ளும் 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் இன்று (இந்திய நேரப்படி ஜூன் 2) ஆரம்பமாக உள்ளது. இதற்கு முன்னதாக இந்திய அணி ஒரேயொரு பயிற்சி ஆட்டத்தில் வங்காளதேசத்துக்கு எதிராக இன்று ஆடி வருகிறது.

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் களம் இறங்கினர். இதில் சாம்சன் 1 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து ரிஷப் பண்ட் களம் இறங்கினார்.

சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடிய ரோகித் 23 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து பண்ட் உடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இதில் அதிரடியாக ஆடிய பண்ட் 32 பந்தில் 53 ரன் எடுத்த நிலையில் ரிட்டையர்டு அவுட் மூலம் வெளியேறினார். இதையடுத்து களம் இறங்கிய ஷிவம் துபே 14 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் 31 ரன்னிலும் அவுட் ஆகினர்.

இதையடுத்து ஹர்திக் பாண்ட்யா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஜோடி சேர்ந்தனர். இதில் பாண்ட்யா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதியில் இந்திய அணி 20 ஒவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது.

இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 53 ரன்களும், பாண்ட்யா 40 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் ஆட உள்ளது.


Next Story