எங்கள் பந்துவீச்சாளர்கள் எங்களுக்கு வெற்றியை பெற்று கொடுத்திருக்கிறார்கள் - ஆண்ட்ரே ரசல்


எங்கள் பந்துவீச்சாளர்கள் எங்களுக்கு வெற்றியை பெற்று கொடுத்திருக்கிறார்கள் - ஆண்ட்ரே ரசல்
x

Image Courtesy: AFP

4 ஓவர்களில் 17 ரன் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்திய வருண் சக்ரவர்த்திக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

கொல்கத்தா,

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்குவதற்கு முன்னர் மழை பெய்ததால் இந்த ஆட்டம் 16 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதையடுத்து இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணி 16 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 42 ரன்கள் எடுத்தார். மும்பை தரப்பில் சால்வா, பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து 158 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை அணி 16 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 18 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி பெற்று நடப்பு ஐ.பி.எல் தொடரில் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

மும்பை தரப்பில் அதிகபட்சமாக இஷான் கிஷன் 40 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா தரப்பில் ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, ரசல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இந்த ஆட்டத்தில் 4 ஓவர்களில் 17 ரன் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்திய கொல்கத்தா வீரர் வருண் சக்ரவர்த்திக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்த பின்னர் கொல்கத்தா வீரர் ரசல் அளித்த பேட்டியில் கூறியதாவது, நாங்கள் முதலில் பேட்டிங் செய்தோம். ஆடுகளம் கொஞ்சம் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது. எனவே நாங்கள் எடுத்த ரன்கள் வெற்றி பெறுவதற்கு போதும் என்று நினைத்தோம். அவர்கள் நல்ல ஒரு தொடக்கத்தை பெற்றனர்.

ஆனால் அதன் பின்னர் நாங்கள் அவர்களை பின்னுக்கு தள்ளினோம். எங்கள் பந்துவீச்சாளர்கள் எங்களுக்கு வெற்றியை கொடுத்திருக்கிறார்கள். சூர்யகுமார் யாதவுக்கு எளிமையாக பந்தை வைக்க நினைத்தேன். அவருக்கு எதிராக மைதானத்தில் பெரிய பக்கத்தை பயன்படுத்த முடிவு செய்தோம். அவர் 360 டிகிரி வீரர். மேலும் இது நம்முடைய நம்பிக்கையைப் பற்றியது என நினைக்கிறேன்.

வயதாகும்போதும் உங்களுக்கு அனுபவம் கிடைக்கிறது நீங்கள் நன்றாக விளையாட முடியும். நான் உடல் தகுதிக்காக கடுமையாக உழைத்தேன். என் அணியின் வெற்றிக்கு பங்களிப்பு செய்வதில் மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கள் அணியில் நிறைய இளம் வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எங்களிடம் கேட்டு தெரிந்து கொள்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story