சரியான தருணம் இதுவே; கோலியை தொடர்ந்து ஓய்வு முடிவை அறிவித்த ரோகித் சர்மா


சரியான தருணம் இதுவே; கோலியை தொடர்ந்து ஓய்வு முடிவை அறிவித்த ரோகித் சர்மா
x

டி20 போட்டிகளில் ரோகித் 159 போட்டிகளில் விளையாடி 4,231 ரன்கள் சேர்த்திருக்கிறார். இவற்றில் 5 சதம் மற்றும் 32 அரை சதங்களும் அடங்கும்.

பார்படாஸ்,

டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி பார்படாஸ் நகரில் இன்று நடந்தது. இதில், இந்திய மற்றும் தென்ஆப்பிரிக்க அணிகள் விளையாடின. போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது.

177 ரன்கள் என்ற சவாலான இலக்குடன் விளையாடிய தென்ஆப்பிரிக்க அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்களே எடுத்தது. இதனால், இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றது.

போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ரோகித் சர்மா, இதுவே என்னுடைய இறுதி போட்டி. ஓய்வு பெற இதனை விட மிக சிறந்த தருணம் இல்லை. கோப்பையை வெல்ல வேண்டும் என்று மிக அதிகம் விரும்பினேன். அதனை வார்த்தைகளால் கூறுவது மிக கடினம் என்று கூறினார்.

தொடர்ந்து அவர், இதுவே நான் விரும்பியது. அது நடந்து விட்டது. என்னுடைய வாழ்க்கையில் இது கிடைக்கும் என்ற நம்பிக்கையில்லாமல் இருந்தேன். இந்த முறை அதனை நாங்கள் கடந்திருக்கிறோம் என்பதில் மகிழ்ச்சி என்றார்.

டி20 போட்டிகளில் ரோகித் 159 போட்டிகளில் விளையாடி 4,231 ரன்கள் சேர்த்திருக்கிறார். இவற்றில் 5 சதம் மற்றும் 32 அரை சதங்களும் அடங்கும். அவர் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார்.

விராட் கோலி ஓய்வு முடிவை அறிவித்த சில மணிநேரத்தில், அவருடைய நீண்டகால சக வீரரான ரோகித்தும் ஓய்வு முடிவு பற்றி தெரிவித்து உள்ளார்.


Next Story