பி.சி.சி.ஐ.யிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள் - பாக். கிரிக்கெட் வாரியத்தை விளாசும் கம்ரான் அக்மல்


பி.சி.சி.ஐ.யிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள் - பாக். கிரிக்கெட் வாரியத்தை விளாசும் கம்ரான் அக்மல்
x

அஸ்வின் மற்றும் ஜடேஜா இல்லாமல் சொந்த மண்ணில் இந்திய அணியால் விளையாட முடியாது என்று கம்ரான் அக்மல் பாராட்டியுள்ளார்.

லாகூர்,

இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்திற்கு எதிராக சொந்த மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

முன்னதாக சமீபத்தில் பாகிஸ்தானை அதனுடைய சொந்த மண்ணில் 2 - 0 என்ற கணக்கில் முதல் முறையாக தோற்கடித்து வங்காளதேசம் வரலாறு படைத்தது. அதே போல இந்தியாவையும் அதனுடைய சொந்த மண்ணில் வீழ்த்துவோம் என்று வங்கதேச கேப்டன் நஜ்முல் சான்டோ சவால் விடுத்திருந்தார். ஆனால் இந்தியா, வங்காளதேசத்தை சுருட்டி வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் பி.சி.சி.ஐ. மற்றும் இந்திய அணியை பார்த்து பாகிஸ்தான் அணி மற்றும் அதன் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) கற்றுக்கொள்ள வேண்டும் என அந்நாட்டின் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் விளாசியுள்ளார். அத்துடன் அஸ்வின் மற்றும் ஜடேஜா இல்லாமல் சொந்த மண்ணில் இந்திய அணியால் விளையாட முடியாது என்றும் அவர் பாராட்டியுள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:- "பி..சி.சி.ஐ.யின் தொழில்முறை, தேர்வாளர்கள், கேப்டன் மற்றும் பயிற்சியாளர்களை பார்த்து பிசிபி கற்றுக்கொள்ள வேண்டும். இந்த விஷயங்கள்தான் இந்தியாவை நம்பர் 1 அணியாக முன்னேற்றி உலக கிரிக்கெட்டில் ஆதிக்கம் செய்ய வைக்கிறது. மறுபுறம் உங்களுடைய ஈகோவால்தான் பாகிஸ்தான் அணி பாதிப்புகளை சந்திக்கிறது. வங்காளதேச போட்டியில் அஸ்வினிடமிருந்து என்ன ஒரு அற்புதமான ஆல் ரவுண்ட் செயல்பாடு வந்தது.

முதலில் சதமடித்த அவர் 2வது இன்னிங்சில் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஜடேஜாவுடன் அவர் மேட்ச் வின்னிங் பார்ட்னர்ஷிப் அமைத்தார். இந்த 2 வீரர்கள் இல்லாமல் இந்தியா தங்களது சொந்த மண்ணில் நடைபெறும் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை அமைக்க முடியாது. அவர்கள்தான் இந்தியாவின் வெற்றிக்கான சாவியாக இருக்கிறார்கள். அதே போல ரிஷப் பண்ட் அற்புதமாக செயல்பட்டார். காயத்திலிருந்து குணமடைய வைத்து மீண்டும் அவரை களத்திற்கு கொண்டு வந்த மருத்துவக் குழுவினர் பயிற்சியாளர்கள் ஆகியோருக்கு நான் தலை வணங்குகிறேன்" என்று கூறினார்.


Next Story