இரானி கோப்பை 2024; ரகானே நிதான ஆட்டம்... முதல் நாள் ஆட்ட நேர முடிவில் மும்பை 237/4


இரானி கோப்பை 2024; ரகானே நிதான ஆட்டம்... முதல் நாள் ஆட்ட நேர முடிவில் மும்பை 237/4
x

Image Courtesy: @BCCIdomestic

மும்பை - ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகளுக்கு இடையிலான இரானி கோப்பை தொடருக்கான டெஸ்ட் போட்டி லக்னோவில் இன்று தொடங்கியது.

லக்னோ,

மும்பை மற்றும் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகளுக்கு இடையிலான இரானி கோப்பை தொடருக்கான டெஸ்ட் போட்டி லக்னோவில் இன்று தொடங்கியது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ரெஸ்ட் ஆப் இந்தியா கேப்டன் ஜெய்ஸ்வால் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதையடுத்து மும்பை அணியின் தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா மற்றும் ஆயுஷ் மத்ரே ஆகியோர் களம் இறங்கினர்.

இதில் பிரித்வி ஷா 4 ரன்னிலும், ஆயுஷ் மத்ரே 19 ரன்னிலும், அடுத்து வந்த ஹர்திக் தாமோர் ரன் எடுக்காமலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து கேப்டன் அஜிங்ய ரகானே மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர்.

நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய அஜிங்ய ரகானே மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் ஸ்ரேயாஸ் ஐயர் 57 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து சர்பராஸ் கான் களம் இறங்கினார். இவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார்.

மும்பை அணி 68 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்திருந்த போது போதிய வெளிச்சமின்மை காரணமாக தடைப்பட்டது. தொடந்து நிலைமை சீராகாததால் முதல் நாள் அத்துடன் முடிக்கப்பட்டது. மும்பை தரப்பில் ரகானே 86 ரன் (197 பந்துகள்), சர்பராஸ் கான் 54 ரன் (88 பந்துகள்) எடுத்து களத்தில் உள்ளனர். ரெஸ்ட் ஆப் இந்தியா தரப்பில் முகேஷ் குமார் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 2வது நாள் ஆட்டம் நாளை நடைபெறுகிறது.


Next Story