தலைமை பயிற்சியாளராக கம்பீருக்கான சவால்கள் குறைவுதான்.. ஆனால்.. - சேவாக் கருத்து


தலைமை பயிற்சியாளராக கம்பீருக்கான சவால்கள் குறைவுதான்.. ஆனால்.. - சேவாக் கருத்து
x

image courtesy: AFP

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர் நியமிக்கப்பட்டது குறித்து சேவாக் தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்றுள்ளார். தோனி தலைமையில் 2007 (டி20), 2011 (ஒருநாள்) உலகக்கோப்பைகளை இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் ஐபிஎல் தொடரில் கேப்டனாக 2 சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார். அத்துடன் கொல்கத்தா அணி 10 வருடங்கள் கழித்து ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கு கவுதம் கம்பீர் ஆலோசகராக முக்கிய பங்காற்றினார். அதனால் ராகுல் டிராவிட்டுக்குப் பின் அவரை பிசிசிஐ புதிய பயிற்சியாளராக தேர்ந்தெடுத்துள்ளது.

இந்த நிலையில் கம்பீர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது குறித்து சேவாக் தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், "ஒரு பயிற்சியாளராக கம்பீருக்கு எந்த ஒரு பெரிய சவாலும் இல்லை என்றுதான் நினைக்கிறேன். ஏனென்றால் இந்திய அணியில் இருப்பது தொழில் முறை கிரிக்கெட் வீரர்கள். அதுமட்டுமல்லாமல் தற்போதுதான் டி20 உலகக்கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வென்று இருக்கிறார்கள். வீரர்களுக்கு தாங்கள் என்ன செய்ய வேண்டும். தங்களுடைய பொறுப்பு என்ன என்பதெல்லாம் நன்றாகவே தெரியும். அது மட்டும் இல்லாமல் கம்பீரின் வருகைக்கு பிறகு இன்னும் அதிகமான தெளிவு வீரர்களுக்கு கிடைக்கும். உன்னுடைய பணி இதுதான். நீ இதை செய்தால் இந்திய அணிக்கு இத்தகைய நன்மை கிடைக்கும் என்பதை எல்லாம் கம்பீர் அழகாக எடுத்துரைப்பார்.

கம்பீருக்கான சவால்கள் குறைவுதான். ஆனால் வீரர்களுக்கான சவால்கள்தான் அதிகம். தற்போது டி20 உலகக்கோப்பையை வென்றிருப்பதால் சாம்பியன்ஸ் கோப்பை அல்லது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்ல வேண்டும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். இது அனைத்தையும் வீரர்கள்தான் தாங்கிக் கொள்ள வேண்டும். எனவே எப்போதுமே பயிற்சியாளர்களை விட வீரர்களுக்குத்தான் அதிக சவால்கள் இருக்கும். கம்பீர் தற்போது பயிற்சியாளராக இருப்பதால் நிச்சயம் வீரர்களுக்கு துணையாக இருப்பார்" என்று கூறினார்.


Next Story