விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா மீண்டும் டி20 அணிக்கு தேர்வானது குறித்து அதிருப்தி தெரிவித்த முன்னாள் இந்திய வீரர்..!


விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா மீண்டும் டி20 அணிக்கு தேர்வானது குறித்து அதிருப்தி தெரிவித்த முன்னாள் இந்திய வீரர்..!
x

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இடம்பெற்றுள்ளனர்.

புதுடெல்லி,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஆட்டம் வரும் 11-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் கேப்டனாக ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் விராட் கோலி மீண்டும் டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. ஏனெனில் நீண்ட காலம் கழித்து இருவரும் டி20 அணிக்கு திரும்பி உள்ளனர். அந்த நிலைமையில் தற்போது மீண்டும் தேர்வாகியுள்ள அவர்கள் இந்தாண்டு நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பையில் விளையாடுவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.

கடந்த டி20 உலக்கோப்பையில் இந்தியா தோல்வியடைய விராட் கோலியை தவிர்த்து சில சீனியர் வீரர்களின் சுமாரான செயல்பாடுகள் முக்கிய காரணமாக அமைந்தன. அதனால் அவர்களை கழற்றி விட்டு ஹர்திக் பாண்ட்யா தலைமையில் புதிய அணியை களமிறக்குவதற்காக சமீபத்திய தொடர்களில் ரிங்கு சிங், ஜெய்ஸ்வால் போன்ற நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவுக்கு மீண்டும் டி20 அணியில் வாய்ப்பு கொடுத்துள்ளதால் இந்திய அணி வருங்காலத்தை நோக்கி செல்வதற்கான முடிவை எடுக்கவில்லை என முன்னாள் வீரர் தீப் தாஸ்குப்தா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "விராட் மற்றும் ரோகித் ஆகியோரிடமிருந்து டி20 அணி நகர்ந்து விட்டது என்று நான் நினைத்தேன். ஏனெனில் கடந்த டி20 உலகக்கோப்பையில் சீனியர் வீரர்கள் அதிரடியாக விளையாடாமல் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்ததால் விமர்சனங்கள் வந்தன. ஆனால் இம்முறை உலகக்கோப்பை நடைபெறும் வெஸ்ட் இண்டீஸில் 180 - 160 ரன்கள் மட்டுமே அடிக்கக் கூடிய மைதானங்கள் இருக்கும் என்று நீங்கள் எதிர்பார்த்து இந்த முடிவை எடுத்துள்ளீர்கள்.

ஒருவேளை நீங்கள் ரோகித் மற்றும் விராட் கோலிக்கு வாய்ப்பு கொடுத்தால் கடந்த ஒரு வருடத்தில் விளையாடிய இளம் வீரர்களுக்கு தற்போது எந்த வாய்ப்பும் கிடைக்கப் போவதில்லை. உண்மையை சொல்ல வேண்டுமெனில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவுக்கு மீண்டும் டி20 அணியில் வாய்ப்பு கொடுத்துள்ளதால் இந்திய அணி வருங்காலத்தை நோக்கி செல்வதற்கான முடிவை எடுக்கவில்லை' என்று கூறினார்.


Next Story