விராட் கோலியை 3-வது இடத்தில் இறக்கி அவரை தொடக்க வீரராக களமிறக்குங்கள் - கைப் கோரிக்கை


விராட் கோலியை 3-வது இடத்தில் இறக்கி அவரை தொடக்க வீரராக களமிறக்குங்கள் - கைப் கோரிக்கை
x

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் தொடக்க வீரராக களமிறங்கி வரும் விராட் கோலி ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்து வருகிறார்.

மும்பை,

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள முன்னாள் சாம்பியன் ஆன இந்திய அணி தனது முதல் 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. முதல் ஆட்டத்தில் அயர்லாந்தை வீழ்த்திய இந்தியா, 2-வது ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தானை வீழ்த்தியது. இதனையடுத்து 3-வது ஆட்டத்தில் அமெரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது மட்டுமின்றி சூப்பர் 8 சுற்றுக்கும் தகுதிபெற்று அசத்தியது.

முன்னதாக இந்த தொடரில் தொடக்க வீரராக களமிறங்கிய விராட் கோலி சுமாராக விளையாடி வருவது ரசிகர்களிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன் 3-வது இடத்தில் களமிறங்கிய அவர் டி20 உலகக்கோப்பையில் அதிக ரன்கள் குவித்து 2 தொடர்நாயகன் விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளார். ஆனால் கடந்த ஐபிஎல் தொடரில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி ஆரஞ்சு தொப்பியை வென்றதால் இம்முறை அவரை இந்திய அணி நிர்வாகம் ஓப்பனிங்கில் களமிறக்கியுள்ளது.

அந்த வாய்ப்பில் 1, 4, 0 என இதுவரை ஒற்றை ரன்களில் விராட் கோலி அவுட்டானதால் மீண்டும் 3வது இடத்தில் களமிறக்குமாறு கோரிக்கைகள் குவிந்து வருகின்றன. ஏனெனில் டி20 உலகக்கோப்பையில் 3வது இடத்தை தவிர்த்து விளையாடிய 4 இன்னிங்ஸில் அவர் 3 முறை ஒற்றை இலக்கத்தில் அவுட்டாகியுள்ளார்.

இந்நிலையில் ஐபிஎல் தொடர்போல இந்த உலகக் கோப்பையில் பிளாட்டான பிட்சுகள் கிடையாது என்று முகமது கைப் தெரிவித்துள்ளார். எனவே விராட் கோலியை 3-வது இடத்தில் களமிறக்குங்கள் என்று வெளிப்படையாக கேட்டுக்கொள்ளும் அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு:-

"இங்கே பேட்டிங் சுலபமாக இல்லாத சூழ்நிலைகளில் விராட் கோலி ஓப்பனிங்கில் விளையாடுகிறார். ஐபிஎல்போல பிளாட்டான பிட்சுகள் இல்லையெனில் அங்கே நீங்கள் பேட்டிங் செய்வது மிகவும் கடினம். ஐபிஎல் தொடரில் அங்கே விராட் கோலி ஆக்ரோஷமாகவும் அற்புதமாகவும் விளையாடினார். ஆனால் இங்கே அவர் ஆக்ரோஷமாக விளையாடாமல் தன்னுடைய விக்கெட்டை பாதுகாத்து விளையாட வேண்டும். எனவே விராட் கோலி மூன்றாவது இடத்தில் தன்னுடைய இயற்கையான ஆட்டத்தை விளையாட வேண்டும்.

அவர் நேரம் எடுத்து சூழ்நிலையை அறிந்து செட்டிலாகி 50 - 60 ரன்கள் எடுத்தால் கூட நல்லது. கடந்த உலகக்கோப்பைகளில் அவருடைய புள்ளிவிவரங்கள் அற்புதமாக இருக்கிறது. மறுபுறம் 5வது இடத்திலிருந்து ரிஷப் பண்ட் 3-வது இடத்தில் விளையாட முடியுமானால் அவரால் ஓப்பனிங்கிலும் களமிறங்க முடியும். அங்கே உங்களுக்கு ரோகித் - ரிஷப் பண்ட் ஆகிய இடது வலது கை கூட்டணி அமையும். இது அணிக்கு மேலும் வலு சேர்க்கும்" என்று கூறினார்.


Next Story