உலகக் கோப்பை கிரிக்கெட்: சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் கடந்து அசத்தல்..!


உலகக் கோப்பை கிரிக்கெட்: சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் கடந்து அசத்தல்..!
x

image courtesy: BCCI twitter

358 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி பேட்டிங் செய்ய உள்ளது.

மும்பை,

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வரும் 33-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா - இலங்கை அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அடுத்த பந்தில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

அதன் பின்னர் சுப்மன் கில்லுடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இருவரும் இலங்கை அணியின் பந்துவீச்சை திறம்பட சமாளித்து அரைசதம் கடந்தனர். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சுப்மன் கில், விராட்கோலி இருவரும் சதம் அடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 92 (11 பவுண்டரி, 2 சிக்சர்) ரன்களில் சுப்மன் கில் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து விராட் கோலியும் 88 (11 பவுண்டரி) ரன்களில் அவுட்டானார்.

தொடர்ந்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயரும் அதிரடியாக விளையாடி ரன்குவிப்பில் ஈடுபட்டார். மறுபுறம் கே.எல்.ராகுல் 21 ரன்களிலும் சூர்யகுமார் யாதவ் 12 ரன்களிலும் அவுட்டாகினர். சிக்சர் மழை பொழிந்த ஸ்ரேயாஸ் ஐயர் 56 பந்துகளில் 82 (3 பவுண்டரி, 6 சிக்சர்) ரன்கள் எடுத்திருந்த நிலையில் 47.3வது ஓவரில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அவர் 106 மீட்டர் தூரம் சிக்சர் அடித்து நடப்பு உலகக் கோப்பை தொடரில் அதிக தூர சிக்சரை பதிவு செய்தார்.

இந்த நிலையில் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 357 ரன்கள் குவித்தது. இதையடுத்து 358 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி பேட்டிங் செய்ய உள்ளது. இலங்கை அணி சார்பில் தில்ஷான் மதுஷங்கா 5 விக்கெட்டுகளும் துஷமந்தா சமீரா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.


Next Story