ரோகித் சர்மாவுடன் மோதலா..? சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சுப்மன் கில்லின் இன்ஸ்டா பதிவு


ரோகித் சர்மாவுடன் மோதலா..? சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சுப்மன் கில்லின் இன்ஸ்டா பதிவு
x

ரோகித் சர்மா உடன் சுப்மன் கில் மோதலில் ஈடுபட்டதாக கூறப்பட்டு வந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள பதிவு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

நியூயார்க்,

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியுடன் ரிசர்வ் வீரர் பட்டியலில் ரிங்கு சிங், ஆவேஷ் கான், கலீல் அகமது மற்றும் சுப்மன் கில் ஆகியோர் பயணித்தனர். இந்திய அணி வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டாலும், இந்திய அணி விளையாடும் போட்டிகளை நேரில் காண சுப்மன் கில் வரவில்லை. ஆவேஷ் கான், ரிங்கு சிங், கலீல் அஹ்மத் ஆகியோர் நேரில் வந்த போதும், சுப்மன் கில் மட்டும் மைதானத்திற்கு வராமலேயே இருந்தார்.

இந்த நிலையில் குரூப் சுற்றுடன் சுப்மன் கில் நாடு திரும்புவதாக தகவல் வெளியாகியது. ரிங்கு சிங், கலீல் அகமது இந்திய அணியுடன் பயணிக்கின்றனர். ஆனால் ஆவேஷ் கான் மற்றும் சுப்மன் கில் ஏன் நாடு திரும்புகிறார்கள் என்ற தகவல் வெளி வந்தது. சுப்மன் கில் ஒழுங்கீன நடவடிக்கை காரணமாகவே இந்தியாவுக்கு திரும்பவுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன.

அதுமட்டுமல்லாமல் இன்ஸ்டாகிராமில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவை பின் தொடர்வதில் இருந்து சுப்மன் கில் விலகினார். இதனால் ரோகித் சர்மா ரசிகர்கள் பலரும் சுப்மன் கில்லை சோசியல் மீடியாவில் விமர்சித்து வந்தனர். அதுமட்டுமல்லாமல் சுப்மன் கில் - ரோகித் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சுப்மன் கில் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், ரோகித் சர்மா மற்றும் அவருடைய மகள் சமைராவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த பதிவுடன், நானும் சமைராவும் ரோகித் சர்மாவிடம் இருந்து ஒழுக்கத்தை கற்று வருகிறோம் என்று எழுதியிருக்கிறார். இதன் மூலம் சுப்மன் கில் பல்வேறு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.


Next Story