விராட் , ரோகித் இடத்தை நிரப்ப 4 வீரர்கள் தயாராக உள்ளனர் - தினேஷ் கார்த்திக்


விராட் , ரோகித் இடத்தை நிரப்ப 4 வீரர்கள் தயாராக உள்ளனர் - தினேஷ் கார்த்திக்
x

விராட் மற்றும் ரோகித் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டனர்.

புதுடெல்லி,

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்று சாதனை படைத்தது. இந்த வெற்றியுடன் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.

அதில் ரோகித் சர்மா களத்தில் பொறுமையாக இருந்து பேட்டிங்கில் அதிரடியாக செயல்படக்கூடியவர். அதிரடியாக விளையாடி எதிரணிகளை பந்தாடுவதில் வல்லவரான அவரை ரசிகர்கள் ஹிட்மேன் என்று அழைக்கின்றனர். மறுபுறம் அதற்கு நேர்மாறாக விராட் கோலி களத்தில் ஆக்ரோஷமாக செயல்பட கூடியவர். ஆனால் பேட்டிங்கில் மிகவும் நங்கூரமாக விளையாடக் கூடிய அவர் கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தி பெரிய ரன்கள் குவித்து அணிக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்து வருகிறார்.

டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து தொடர்ந்து விளையாட உள்ளனர்.

இந்நிலையில் புதிய கேப்டன் (டி20 போட்டிகள்) மற்றும் பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள சூர்யகுமார் மற்றும் கவுதம் கம்பீர் ஆகியோர் முதலில் ரோகித், விராட் கோலி ஆகியோருக்கான மாற்று வீரர்களை கண்டறிய வேண்டும் என முன்னாள் வீரரான தினேஷ் கார்த்திக் கேட்டுக் கொண்டுள்ளார். அதற்கு ருதுராஜ், ஜெய்ஸ்வால், திலக் வர்மா போன்ற வீரர்கள் தேவை என்றும் தினேஷ் கார்த்திக் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "முதலில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரின் இடத்தை நிரப்புவது மிகவும் கடினம். ஆனால் இந்திய அணியில் அவர்களுடைய இடத்தை நிரப்புவதற்கு 4 வீரர்கள் தயாராக உள்ளதாக நான் கருதுகிறேன். குறிப்பாக ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சுப்மன் கில் ஆகியோர் தயாராக உள்ளனர். அதேபோல ஜெய்ஸ்வால் கண்டிப்பாக டி20 கிரிக்கெட்டின் பிளேயிங் லெவனில் துவக்க வீரராக இருப்பார்" என்று கூறினார்.


Next Story